சென்னை: இறுதியாண்டு, இறுதி செமஸ்டர் தேர்வுகளில் அரியர் வைத்துள்ள மாணவர்களுக்கு 22 ம் தேதி தேர்வு நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்து உள்ளது.

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் இந்த மாதமே கல்லூரி இறுதித்தேர்வுகளை நடத்தி முடிக்க யுஜிசி அறிவுறுத்தி உள்ளது. அதன்படி தமிழகத்தில், அனைத்து கல்லூரிகளிலும் தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டு, தேர்வை நடத்த தயாராகி வருகின்றனர்.

சென்னை அண்ணா பல்கலைக்கழகம் கீழ் உள்ள பொறியியல் கல்லூரிகளிலும், தேர்வு தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து,   அரியர் மாணவர்களுக்கு வரும் 22 ம் தேதி முதல் தேர்வுகள் நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

2012 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரையில், இறுதி செமஸ்டர் தேர்வில் அரியர் வைத்துள்ள மாணவர்களும் தேர்வில் பங்கேற்க அண்ணா பல்கலை. அனுமதி வழங்கி உள்ளது. மாணவர்கள்   தேர்வு கட்டணத்தை வரும் 15 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதிக்குள் செலுத்தி பதிவு செய்து கொள்ளலாம் என்றும் தெரிவித்து உள்ளது.

இறுதி செமஸ்டர் தேர்வுகளில் அரியர் வைத்து ஏப்ரல், மே மாதத்தில் இறுதி செமஸ்டர் எழுதவிருந்த மாணவர்களுக்கும் தேர்வு நடைபெறவுள்ளது.  செய்முறை தேர்வுகள் 22-ம் தேதி நடைபெறும் என்றும் எழுத்துத் தேர்வுகள் 24 ம் தேதி நடைபெறும் கூறியுள்ளது.

தேர்வுக்கு விண்ணப்பிக்காத மாணவர்கள் வரும் 15 முதல் 17 வரை விண்ணப்பிக்கலாம் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது