சென்னை: பொறியியல் மாணவர்கள் ஏராளமானோரின் முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் விளக்கம் அளித்துள்ளது.

கொரோனா காரணமாக இந்த ஆண்டு பொறியியல் மாணவர்களுக்கான இறுதி செமஸ்டர் தேர்வு ஆன்லைனில் நடைபெற்றது. இறுதியாண்டு மாணவர்கள் தவிர,மற்றவர்களுக்கு செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன.
செப்டம்பர் 24ம் தேதி முதல், இளங்கலை மற்றும் முதுகலை இறுதி செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்பட்டன. செப்டம்பர் 29-ம் தேதி வரை நடைபெற்ற இத்தேர்வில், 30 மதிப்பெண்களுக்கு ஒரு மணிநேரம் ஒதுக்கப்பட்டது.
தொழில்நுட்ப கோளாறால் சரியாக தேர்வை எழுதாத மாணவர்களுக்கு 2வது வாய்ப்பும் அளிக்கப்பட்டது. பின்னர் விடைகள் அனைத்தும் மதிப்பீடு செய்யப்பட்டு, ஆன்லைனில் முடிவுகள் வெளியிடப்பட்டன.
இந் நிலையில், பொறியியல் இறுதி செமஸ்டர் தேர்வில் ஏராளமான மாணவர்களின் முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டது. தேர்வின் போது முறைகேட்டில் ஈடுபட்டதாக சந்தேகம் என்பதால் முடிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.  முடிவு நிறுத்தி வைக்கப்பட்ட மாணவர்களுக்கு மறுதேர்வு குறித்தும் அறிவிப்பு வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.