வாஷிங்டன்:

நிதி மோசடி வழக்கில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் உள்பட 2 பேருக்கு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

தேபாஷிஸ் கோஷ் என்ற அந்த நபரும் கீத் எரிக் ஜெர்ஜென்சன் என்பவரும் அமெரிக்காவில், ‘‘வெர்டன்ட் கேபிடல் குரூப்’’ சிஇஓ.க்களாக இருந்தனர். 2010ம் ஆண்டில் நியூயார்க்கைச் சேர்ந்த ‘‘லாரென்டின் ஏரோஸ்பேஸ் கார்ப்பரேஷன்’’ நிறுவனத்தை வெர்டன்ட் கேப்பிடல் குரூப் நிறுவனத்தை அணுகியது. விமான தளம் அமைப்பது தொடர்பாக ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.

இதற்கு 160 கோடி ரூபாயை தனி கணக்கில் லாரென்டின் நிறுவனம் செலுத்தியது. ஆனால் இதன் அனுமதி இல்லாமலேயே தேபாஷிஸ் கோஷ், கீத் எரிக் ஜெர்ஜென்சன் ஆகியோர் பணத்தை எடுத்து மோசடி செய்துள்ளனர். இது குறித்த புகாரில் பேரில் இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. 2017ம் ஆண்டில் இவர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் உறுதிபடுத்தப்பட்டது. இவ்வழக்கின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிமன்றம் இருவருக்கும் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.