உலகப்புகழ் பெற்ற சுற்றுலா தளமான கோவாவை இரண்டு இந்தி சினிமா நட்சத்திரங்கள் அடுத்தடுத்த நாட்களில் ஆபாச ஸ்தலமாக்கிய சம்பவம் அந்த மாநில மக்களை கொதிப்படைய செய்துள்ளது.

முதல் நட்சத்திரம் நடிகை பூனம் பாண்டே, சர்ச்சையில் சிக்குவது இவரது தொழில்.

மூன்று தினங்களுக்கு முன்னர் கோவா மாநிலத்துக்கு சென்ற அவர் அங்குள்ள கன்கோனா என்ற இடத்தில் அணைப்பகுதியில் நடந்த ஆபாச சினிமா படப்பிடிப்பில் பங்கேற்றுள்ளார்.

இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது, இது குறித்து போலீசிலும் புகார் அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பூனம் கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில் அதே நாளில் கோவா மாநிலத்துக்கு சென்ற இந்தி நடிகர் மிலிந்த் சோமன், தனது 55 –வது பிறந்த நாளை அங்கு கொண்டாடியுள்ளார்.

எப்படி கொண்டாடினார்?

உடைகளை முழுக்க களைந்து விட்டு, பிறந்த மேனியாக மிலிந்த் கடற்கரையில் ஓடுகிறார்.

இந்த கண்கொள்ளா காட்சியை அவரது மனைவி அங்கிதா போட்டோ எடுத்துள்ளார்.

பின்னர், தான் நிர்வாணமாக கடற்கரையில் ஓடும் காட்சியை மிலிந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட, அந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலானது.

கோவா மாநிலம், ஆபாச ஸ்தலமாகி வருவதை பொறுக்க முடியாத ஒரு அமைப்பின் தலைவர் கொல்வா காவல்நிலையத்தில் இது குறித்து புகார் அளித்தார்.

போலீசார் மிலிந்த் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

– பா. பாரதி