தாம்பரத்தை அடுத்துள்ள முடிச்சூர் மண்ணிவாக்கம் நாராயணா பள்ளி வளாகத்தில் குப்பைகளில் பற்றிய தீ மளமளவென பரவி புகை சூழ்ந்ததால் மாணவர்கள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.

மண்ணிவாக்கத்தில் உள்ளது நாராயணா பள்ளி. இங்கு பள்ளி வளாகத்தை ஒட்டி 3 ஏக்கரில் காலியிடம் உள்ளது. அங்கிருந்த குப்பைகளில் திடீரென பற்றிய தீ, வெயில் காரணமாக காய்ந்த சருகுகள், காய்ந்த மரங்களுக்கும் மளமளவென பரவியது.

இந்த தீ விபத்து காரணமாக கடுமையான புகைமூட்டம் உருவாகி மாணவர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதனையடுத்து உடனடியாக மாணவர்கள், ஆசிரியர்கள், ஊழியர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.

தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். குப்பைகள் உள்ள பகுதியில் மர்ம நபர்கள் தீ வைத்தனரா அல்லது விபத்தா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தீ விபத்தினால், அதிருஷ்டவசமாக காயமோ உயிர்சேதமோ ஏற்படவில்லை என்பது ஆறுதலான விசயமாகும்.