சென்னை:

சென்னையில் பட்டினம்பாக்கத்தில் குடிசை வீடுகள் அமைந்துள்ள டுமிங் குப்பத்தில்  இன்று அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 25க்கும் மேற்பட்ட குடிசைகள் எரிந்து நாசமாயின.

பட்டினம்பாக்கம்  டுமிங் குப்பத்தில் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு உள்ளது. அங்கு  50க்கும் மேற்பட்ட குடிசை வீடுகளில் மக்கள் வசித்து வருகின்றனர். தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், இரவில் பெரும்பாலோர் காற்று வசதிக்காக வீட்டிற்கு வெளியே வந்து உறங்குவது வழக்கம்.

இந்த நிலையில் இன்று அதிகாலையில்ஒரு குடிசை வீட்டில் பற்றி, மளமளவென அருகில் இருந்த  குடிசை வீடுகளுக்கும் பரவியது. இதனால் பதறியடித்து எழுந்த மக்கள், தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். உடனடியாக தீயணைப்பு துறைக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.

உடனடியாக சம்பவ இடத்துக்கு 2 வாகனங்களில் வந்த தீயணைப்பு துறையினர், தீ  மற்ற குடிசைகளுக்கு தீ பரவாமல் தடுத்து அணைத்தனர். அதற்குள் 25க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் முற்றிலும் எரிந்து நாசமானது.

இந்த தீ விபத்துக்கு மின்கசிவே காரணம் என கூறப்படுகிறது. இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.   தீ விபத்தால் சென்னை பட்டினப்பாக்கம் பகுதியே புகை மண்டலமாக காட்சியளிக்கிறது