பாறை இடுக்கில் சிக்கிய சிறுவன்.. தீயணைப்புத் துறையினர் நடத்திய சாகசம்..

திருச்சி தாத்தையங்கார் பேட்டை அருகே உள்ள ஜம்முநாதபுரத்தில் நேற்று காலை 12 வயதான ஆதித்யா என்ற சிறுவன் வழக்கம் போல் ஆடுமேய்ச்சலுக்கு சென்றுள்ளார்.  ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டுவிட்டு அங்கு இருந்த பாறைகள் மீது அமர்ந்து சிறுவன் தனது செல்போனை பார்த்துக் கொண்டிருந்திருக்கிறார்.  அப்போது எதிர்பாராதவிதமாக அவரது செல்போன் அங்கிருந்த பாறையின் உள்ளே விழுந்தாகத் தெரிகிறது.  ஆதித்யா அதனை எடுக்க முயற்சி செய்துள்ளார்.  அப்போது எதிர்பாராத விதமாக பாறைகளுக்கு இடையேயான பள்ளத்தில் விழுந்ததாகச் சொல்லப்படுகிறது.
வெகுநேரம் ஆகியும் ஆதித்யாவைக் காணாத அவனது சக நண்பர்கள் அவனை தேடியுள்ளனர். அப்போது பள்ளத்திலிருந்து சத்தம் கேட்டுள்ளது.  அங்கு சென்று பார்த்த போது ஆதித்யா ஆறு அடி உள்ள பள்ளத்தில் சிக்கிக் கொண்டதை அவர்கள் அறிந்தனர்.  உடனடியாக அவர்கள் அவரது பெற்றோர் மற்றும் தாத்தையங்கார் பேட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
இதனைத் தொடர்ந்து நிகழ்விடத்திற்கு வந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் 2 மணி நேரம் போராடி ஆதித்யாவை உயிருடன் மீட்டனர்.  எனினும் சிறுவன் மிகவும் சோர்வுடன் காணப்பட்டதால் 108 ஆம்புலன்ஸ் மூலம் சிறுவன் துறையூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தற்போது சிறுவன் நலமுடன் உள்ளார்.
– லெட்சுமி பிரியா