விருதுநகர்,

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் இரண்டு பேர் பலியாயினர்.

விருதுநகர் மாவட்டம் ஏழாயிரம் பண்ணை அருகே உள்ள ஒரு  பட்டாசு ஆலையில் திடீர் வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த கோர சம்பவத்தில் பட்டாசு ஆலையில் வேலை செய்துவந்த 2 பேர் உயிரிழந்துள்ளதாகவும், மேலும் பலர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

வெடி விபத்து குறித்து தகவல் அறிந்ததும், தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு வந்து, அங்கு தீ விபத்தில் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தவர்களை மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த கோர சம்பவத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் எத்தனைபேர் வேலை செய்தனர் என்ற விவரம் தெரியவில்லை.

வீரர்கள் தொடர்ந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஏற்கனவே  கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற, சிவகாசியில் பட்டாசு கடை வெடி விபத்தில் 10க்கும் மேற்பட்டோர் பலியாகினர்  என்பது குறிப்பிடத்தக்கது.