தூத்துக்குடி:

தூத்துக்குடி வன்முறையின்போது பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில், இலவச சட்டஉதவி மையம் தூத்துக்குடி அரசு மருத்துவமனை வளாகத்தில் தொடங்கப்பட்டுள்ளது.

கடந்த 22ந்தேதி நடைபெற்ற மக்கள் போராட்டத்தின்போது, காவலர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில், 13 பேர் உயிரிழந்தனர். மேலும் 100க்கும் மேற்பட்டோர் உயிருக்கு ஆபத்தான் நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் நூற்றுக்கணக்கானோரை போலீசார் கைது செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக,  பாதிக்கப்பட்டோர் மற்றும் அவர்களை சார்ந்தவர்களுக்கு உதவிடும் வகையில், தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பில் இலவச சட்ட உதவி மையம்  தொடங்கப்பட்டுள்ளது.

இந்த மையத்தை  சட்டப் பணிகள் ஆணைக் குழுச் செயலரும், சார்பு நீதிபதியுமான சாமுவேல் பெஞ்சமின்  தொடக்கி வைத்தார்.

“துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பாதிக்கப்பட்டோர் தங்களுக்கு சட்ட உதவி தேவைப்படுமானால், இந்த உதவி மையத்தை நேரடியாக அணுகலாம்’ என்று அறிவிக்கப்பட்டுள்ளது.