நியூயார்க்

ற்போது ஒப்புதலுக்கு தயாராகி உள்ள முதல் கொரோனா தடுப்பூசி 90% க்கும் அதிகமான மக்களுக்குப் பாதுகாப்பு அளித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

கொரோனா பாதிப்பு உலகெங்கும் மிகவும் அதிகரித்து வருகிறது.  இதுவரை 5.08 கோடி பேர் பாதிக்கப்பட்டு 1.26 கோடி பேர் உயிர் இழந்துள்ளனர்.  அனைத்து நாடுகளும் கொரோனா தடுப்பூசி கண்டறிவதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன.   இதில் அனைத்து சோதனைகளிலும் வெற்றி பெற்றுள்ள முதல் தடுப்பூசி தயார் நிலைக்கு வந்துள்ளது.

இந்த தடுப்பூசி கண்டுபிடிப்பாளர்களான ஃபிஸர் மற்றும் பயோண்டெக் நிறுவனத்தினர் இந்த நாள் விஞ்ஞானம் மற்றும் மனிதாபிமானத்துக்கு மிகப்  பெரிய சாதனை நாள் எனத் தெரிவித்துள்ளனர்.  இந்த தடுப்பூசி ஆறு நாடுகளில் 43500 பேருக்குச் செலுத்தப்பட்டு இதுவரை எவ்வித பாதுகாப்பு பிரச்சினைகளும் ஏற்படவில்லை.

இந்த ஆய்வுகள் மூலம் இந்த கொரோனா தடுப்பூசி 90% அதிகமான மக்களுக்கு கொரோனாவில் இருந்து பாதுகாப்பு அளித்துள்ளது தெரிய வந்துள்ளது.  இந்நிறுவனங்கள் விரைவு ஒப்புதல் கோரி இந்த மாத இறுதிக்குள் விண்ணப்பிக்க உள்ளன.   இந்த தடுப்பூசி சோதனை முறையில் செலுத்தப்பட்டு எதிர்ப்புச் சக்தியை அதிகரித்துள்ளது.

 

 

இந்த ஊசி மூன்று வாரங்களில் இருமுறை செலுத்தப்பட வேண்டும்.  இந்த மருந்து அமெரிக்கா, ஜெர்மனி, பிரேசில், அர்ஜெண்டினா, தென் ஆப்பிரிக்கா மற்றும் துருக்கி நாடுகளில் சோதிக்கப்பட்டு 90% வெற்றி பெற்றுள்ளது.

இந்த வருட இறுதிக்குள் இந்த மருந்து 5 கோடி டோஸ்கள் மற்றும் அடுத்த ஆண்டு இறுதிக்குள் 1300 கோடி டோஸ்கள் தயாரிக்கப்படும் என நிறுவனம் கூறி உள்ளது.

இந்த ஊசி மருந்துகளை மைனஸ் 80 டிகிரியில் எப்போதும் வைக்க வேண்டும் என்பதால் போக்குவரத்து ஒரு சவாலாக இருக்கலாம் என எதிர்பார்க்கப் படுகிறது.க்  அத்துடன் இந்த மருந்து எவ்வளவு காலம் சக்தியுடன் இருக்கும் என்பதும் இதுவரை தெரியவில்லை.

ஃபிஸர் நிறுவன தலைவர் ஆல்பர்ட் பவுர்லா, “நாங்கள் உலக மக்களுக்கு மிகவும் தேவையான ஒரு மருந்தை அளிக்க தேவையான ஒரு அடியை எடுத்து வைத்துள்ளோம்.  இந்த நடவடிக்கை உலகெங்கும் உள்ள சுகாதார கேட்டுக்கு முடிவை உண்டாக்கும் என நம்புகிறோம்.” எனத் தெரிவித்துள்ளார்.

இந்த மருந்துக்கு இங்கிலாந்து அரசு 3 கோடி டோஸ்கள் ஆர்டர் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.