மும்பை: இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி இன்று துவங்கவுள்ளது. இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு ஆட்டம் துவங்குகிறது.

இந்த ஒருநாள் தொடர் மொத்தம் 3 போட்டிகள் கொண்டதாகும். இப்போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இந்திய அணியில் சற்று இடைவெளிக்குப் பிறகு ரோகித் ஷர்மா மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் துவக்க வீரர்களாக களமிறங்குவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, துவக்க ராகுல் எந்த இடத்தில் களமிறங்குவார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

மூன்றாம் இடத்தில் இறங்கிவரும் கேப்டன் விராத் கோலி மிடில் ஆர்டருக்கு மாறலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதை கோலியே குறிப்பிட்டுள்ளார். இப்போட்டியில் ரிஷப் பன்ட் நீக்கப்பட்டு, லோகேஷ் ராகுல் விக்கெட் கீப்பராக இடம்பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய அணி, இதற்கு முன்னதாக ஆடிய உள்நாட்டுத் தொடர்களைவிட, ஆஸ்திரேலிய அணியுடனான இந்தத் தொடர் சவாலானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வான்கடே மைதானத்தில் இரவில் பனிப்பொழிவு இருக்கும் என்பதால், டாஸ் வென்றால், முதலில் பந்துவீச்சை தேர்வுசெய்வதே உசிதம் என்று கூறப்படுகிறது.