பாலக்காடு :

கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரம் மாநகராட்சி மேயராக கல்லூரி மாணவி ஆர்யா என்பவர் பதவி ஏற்றுள்ள நிலையில், அங்கு இன்னொரு மாணவியும் இதே போல் சாதனை புரிந்துள்ளார்.

அண்மையில் அங்கு நடந்த உள்ளாட்சி தேர்தலில் பாலக்காடு மாவட்டம் மலம்புழா பஞ்சாயத்து வார்டு தேர்தலில் ராதிகா என்பவர் போட்டியிட்டார்.

எம்.ஏ. முதலாம் ஆண்டு படிக்கும் ராதிகாவின், தந்தை மாதவன் கூலித்தொழிலாளி ஆவார், அங்குள்ள காலனியில் ஒரு அறை மட்டும் கொண்ட வீட்டில் இவர்கள் வசித்து வருகிறார்கள், பாத்ரூம் கூட கிடையாது.

ஆடுகள் வளர்த்து அதில் கிடைக்கும் பணத்தில் படித்து வந்த ராதிகா, மருதக்காடு வார்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளராக போட்டியிட்டார். வெற்றி பெற்றார்.

அங்கு பஞ்சாயத்தில் மொத்தமுள்ள 13 வார்டுகளில் இடதுசாரிகள் 6 வார்டுகளில் வெற்றி பெற்று இருந்தனர். பா.ஜ.க. 5 வார்டுகளையும், காங்கிரஸ் 2 வார்டுகளையும் கைப்பற்றியது.

இந்த நிலையில் நேற்று மலம்புழா பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு நடந்த தேர்தலில் ராதிகா போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

– பா. பாரதி