சென்னை:

ற்போது தமிழகத்தில் மீன்பிடி தடை காலம் தொடங்கி உள்ள நிலையில், மீனவர்களுக்கு வழங்கப்படும் உதவி தொகையை  10ஆயிரம் ரூபாயாக அதிகரிக்க வேண்டும் என தமிழக எதிர்க்கட்சி தலைவரும், திமுக செயல்தலைவருமான மு.க.ஸ்டாலின் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பபதாவது,

மீன்பிடி தடைக்காலம் துவங்கி விட்டதால், ஏற்கனவே பல்வேறு வகையான துன்பங்களை தொடர்ந்து சந்தித்து, சுருண்டு போயிருக்கும், ஏறக்குறைய மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட மீனவர்களும், தொழிலாளர்களும் தங்கள் வாழ்வாதாரத்துக்காக மிகக்கடுமையாகப் போராடும் சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. ஏற்கனவே, பணமதிப்பிழப்பு நடவடிக்கை, இலங்கைக் கடற்படையினரின் கண்மூடித்தனமான தாக்குதல், அதனால் ஏற்பட்டுவரும் அளவிடமுடியாத இழப்புகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால் தமிழ்நாட்டின் மீன்பிடி தொழில்கள் அத்தனையும் நசுங்கி நலிவடைந்து வருகிறது.

இன்றைய விலைவாசி ஏற்றத்தைக் கணக்கில் எடுத்துக் கொண்டால், மீன்பிடித் தடைக்காலத்தை மீனவர் குடும்பங்கள் கடந்து செல்வது, வறண்ட பாலைவனத்தைக் கடந்து செல்வதைக் காட்டிலும் மிகக் கடினமானதாக இருக்கிறது. ஆகவே, இப்போது வழங்கப்படும் 5,000 ரூபாய் உதவித்தொகை அவர்களுக்கு நிச்சயம் போதாது என்பதை நடுநிலையாளர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்வர். இந்த மீன்பிடி தடைக்காலத்தில் குடும்பம் நடத்துவதற்கே மீனவர்கள் மிகவும் சிரமப்படும் சூழல் ஏற்பட்டு, அடுத்த கல்வியாண்டில் தங்கள் பிள்ளைகளை கல்வி நிலையங்களில் சேர்ப்பதற்குப் போராட வேண்டிய நெருக்கடியான நிலை ஏற்படும்.

ஆகவே, வாழ்நாள் முழுவதும் கடலை மட்டுமே நம்பிப் பிழைப்பை நகர்த்தும் மீனவர் குடும்பங்களைக் காப்பாற்றும் வகையில், தற்போது மீன்பிடி தடைக்காலத்திற்கு வழங்கப்பட்டு வரும் 5,000 ரூபாய் உதவித் தொகையை. உயர்த்தி 10,000 என்ற அளவுக்காவது வழங்கி, மீனவ சமுதாயத்திற்கு உதவிட வேண்டுமென்று முதல்வரை கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.