ராமேஸ்வரம்:
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க கோரியும், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை மீட்க கோரியும் இன்று முதல் ராமேஷ்வரம் மீனவர்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்துகின்றனர்.
இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்படுவது வாடிக்கையாக நடைபெற்று வருகிறது. இதுகுறித்து இரு நாட்டு அரசும், மீனவர்களும் பலமுறை பேச்சு வார்த்தை நடத்தியும் எந்தவித இறுதி முடிவும் எடுக்கப்பட வில்லை.
ஒவ்வொரு முறையும் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்படுவதும், படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும், கைது செய்யப்படுவதும் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன.
இலங்கை கடற்படை வசம் உள்ள படகுகள், கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி இன்று ராமேஸ்வரம் மீனவர்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்துகின்றனர்.
ஏற்கனவே இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்த பல கோடி மதிப்புள்ள 115 படகுகள், சிறையிலுள்ள 5 மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்து வருகின்றனர். இதனால் படகுகள் அனைத்தும் மீன்பிடிக்க செல்லாமல் கரையில் நிறுத்தப்பட்டுள்ளன. வருவாய் இழந்த ஆயிரக்கணக்கான மீனவர்கள் வேறு வேலை தேடி வெளியூர்களுக்கு சென்று விட்டனர்.
மீனவர்களின் வேலை நிறுத்த போராட்டம் இன்று ஆறாவது நாளாக நீடித்தபோதும், மாநில அரசோ, மத்திய அரசோ இதுகுறித்து கண்டுகொள்ளாமல் உள்ளது.
கடந்தவாரம் இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே இந்தியா வந்து சென்றும் தமிழக மீனவர்களின் பிரச்னை, படகுகள் விடுவிப்பு, இருநாட்டு பேச்சு வார்த்தை தொடர்பாக மத்திய அரசிடம் இருந்தும் இதுவரை எவ்வித அறிவிப்பும் வெளியாகவில்லை.
தற்போது இலங்கையில் உள்ள தமிழக மீனவர்கள் படகுகள் அனைத்தும் சேதமடையும் வாய்ப்புள்ளது.
நவம்பர், டிசம்பர் மாதங்கள் புயல் மழைக்காலம் என்பதால் கடல்பகுதியில் சீற்றம் அதிகமாகி, கரையில் நிறுத்தப்பட்டுள்ள படகுகள் முற்றிலும் சேதமடைந்து கடலில் மூழ்கும் வாய்ப்புள்ளன.
எனவே, படகுகளை விடுவிப்பதற்கும், சிறையில் உள்ள 5 மீனவர்களை விடுதலை செய்யவும் அரசு துரித நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று உண்ணாவிரத போராட்டம் நடத்துகின்றனர். உண்ணாவிரதத்தை தொடர்ந்து நடத்தவும் மீனவர்கள் திட்டமிட்டுள்ளனர்.