டெல்லி: இங்கிலாந்தில் பரவி வரும்  புதிய வகையிலான கொரோனா  உலக நாடுகளை மீண்டும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. இந்த நிலையில், நேற்று இரவு லண்டனில் இருந்து தலைநகர் டெல்லிக்கு வந்த விமானத்தில் பயணித்த 5 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த ஒரு வருடமாக உலக நாடுகளை சொல்லோன்னாத் துயரத்துக்கு ஆளாக்கி உள்ள கொரோனா வைரஸ் சற்றே குறைந்து  மக்களிடையே நிம்மதி பெருமூச்சு விட வைத்த நிலையில், இங்கிலாந்தில் புதிய வகையிலான கொரோனா வைரஸ் தொற்று பரவி உள்ளது. இது கொரோனாவின்  இரண்டாவது அலை என வர்ணிக்கப்பட்டதாலும், இந்த புதிய தொற்று பரவலின் வேகம் மிகத்தீவிரமாக உள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்து உள்ளது.

இதனால் உலக நாடுகள் மீண்டும் அதிர்ச்சி அடைந்துள்ளன. இங்கிலாந்துக்கு விமான சேவைகளை பல நாடுகள் முடக்கி உள்ளன.  இந்தியாவும் இங்கிலாந்துக்கு விமான சேவைகளை இன்று நள்ளிரவு (22ந்தேதி) முதல் டிசம்பர் 31ந்தேதி வரை விமான சேவைகளை நிறுத்தி உள்ளது. அதுபோல,  தமிழகஅரசும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளது. தமிழகத்திற்கு வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு கொரோனா டெஸ்ட் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்த பரபரப்பான சூழலில் நேற்று இரவு லண்டனில் இருந்து டெல்லி விமான நிலையத்தில் பயணிகள் விமானம் வந்தடைந்தது. அந்த விமானத்தில் மொத்தம் 266 பயணிகள் வந்தனர். அவர்கள் அனைவருக்கும் கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், 5 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து, அவர்களின் ரத்த  மாதிரிகள் என்சிடிசி எனப்படும் (NCDC – National Centre for Disease Control ) தேசிய நோய் கட்டுப்பாட்டுக்கான மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

இதன் காரணமாக, விமானத்தில் பயணம் செய்தவர்கள்  தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.