வேலூர்: பாலாற்றில் நீர்ப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வங்கக் கடலில் உருவான நிவர் புயல் வலுப்பெற்று அதிதீவிர புயலாக மாறி புதுச்சேரி அருகே கரை கடந்தது. அதன் காரணமாக தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும், புதுச்சேரியில் தொடர்மழை பெய்து வந்தது.

புயல் கரையை கடந்து விட்டாலும் பல இடங்களில் மழை நீடிக்கிறது. வேலூர் மாவட்டத்தில் இன்று காலை துவங்கி நல்ல மழை பெய்து வருகிறது. அதன் காரணமாக பாலாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

இந்நிலையில் பாலாற்றில் நீர்ப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி கரையோரமாக வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கும், அரசு ஏற்படுத்தி உள்ள முகாம்களுக்கும் உடனடியாக சென்று விட வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.