பெங்களூரு: கர்நாடகாவில் வெள்ளத்தில் இருந்து 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

கர்நாடகாவில் கிராமங்களில் ஏற்பட்ட வெள்ளத்தில் இருந்து 35 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டுள்ளனர். இதுகுறித்து கர்நாடக மாநில இயற்கை பேரிடர் கண்காணிப்பு மைய அதிகாரி கூறியதாவது:
மகாராஷ்டிராவில் மழை காரணமாக அங்குள்ள பீமா நதி நிரம்பியது. அக்டோபர் 14 முதல் அணைகளில் இருந்து நீர் வெளியேற்றப்படுகிறது. அதன் காரணமாக வடக்கு மாவட்டங்களான கலாபுராகி, விஜயபுரா, யாத்கீர் மற்றும் ரைச்சூர் ஆகிய மாவட்டங்களில் 97 கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளன.
இதையடுத்து அங்கிருந்த 36,290 பேரை வெளியேற்றி உள்ளோம்.  இந் நிலையில், 174 நிவாரண முகாம்களில் 28,007 பேர் தங்கி இருக்கின்றனர். ராணுவம் மற்றும் பேரிடர் மீட்புப் படையினர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து மக்களை வெளியேற்றுவதில் ஈடுபட்டுள்ளனர் என்று கூறினார்.