பூஜைக்கு உகந்த மலர்கள்

மலர்களைக் குறித்து முகநூலில் வைரலாகும் பதிவு

🌺 நாம் இறைவனுக்கு அன்றாடம் பூஜை செய்வதில் ஒரு முக்கிய பங்கு வகிப்பது மலர்கள்தான். மலரில் உள்ள நறுமணமும், அதன் அழகான தோற்றமும், நம் மனதில் உள்ள இறைவனின் பக்தியும் சேர்ந்து நாம் செய்யும் பூஜையின் அழகினை இன்னும் மெருகேற்றும் என்பதற்காகத்தான் மலர்களை இறைவனுக்குச் சமர்ப்பிக்கிறோம்.

🌺 எந்தெந்த தெய்வங்களுக்கு எந்தெந்த மலர்களைச் சமர்ப்பிக்கலாம்? என்பதைத் தெரிந்துகொண்டு அவ்வாறு இறைவனுக்கு உகந்த மலர்களைச் சூட்டி வழிபடுவதால் நமக்குக் கிடைக்கின்ற மனநிறைவானது அதிகம் இருக்கும்.

மலர்களைச் சமர்ப்பிக்கும் முறை :

🌺 மலர்களைத் தெய்வத்திற்கு சமர்ப்பிக்கும்போது ஐந்து விரல்களைக் கொண்டு எடுத்துச் சமர்ப்பிப்பது நல்லது. பூஜை அறையில் உள்ள இறைவனுக்குத் தினமும் புதிய மலர்களைச் சூட்டி அழகு பார்க்க வேண்டும் என்று நினைத்தால் நமது வீட்டிலேயே ஒரு செடி வளர்த்து, புதுப்பொலிவுடன் அந்த பூக்களைப் பறித்து இறைவனுக்குச் சமர்ப்பணம் செய்வது இன்னும் சிறந்தது.

🌺 இறைவனுக்காகப் பறிக்கப்படும் பூக்களைக் குளித்து விட்டுத்தான் செடியிலிருந்து பறிக்க வேண்டும். மலர்களை மாலை நேரத்தில் பறிக்கக்கூடாது.

விநாயகர் :

🌺 சிவப்பு நிறப் பூக்கள் என்றால் விநாயகருக்கு மிகவும் பிடிக்கும். செம்பருத்தியில் நிறைய வண்ணங்கள் இருந்தாலும் சிவப்பு நிற செம்பருத்தி விநாயகருக்கு மிகவும் பிடித்தது.

🌺 இதைத் தவிர தாமரை, ரோஜா, மல்லிகை, சாமந்தி இவற்றைச் சமர்ப்பிக்கலாம். அறுகம்புல் விநாயகருக்கு உகந்தது. கணபதி பூஜை செய்யும்போது 21 விதமான மலர்கள் மற்றும் இலைகளைக் கொண்டு பூஜிக்கப்படுகின்றது.

சிவபெருமான் :

🌺 சிவபெருமானுக்கு வெள்ளை நிற மலர்கள் மிகவும் பிடிக்கும். மகிழம் பூ, தாமரை, ஊமத்தம் பூ, பாரிஜாதம், செவ்வரளி இவற்றைச் சிவபெருமானுக்குச் சமர்ப்பிக்கலாம்.

🌺 சிவனின் பூஜையில் வில்வ இலை முக்கிய பங்கு வகிக்கின்றது. பூச்சி அறித்த வில்வ இலைகளைப் பூஜைக்குப் பயன்படுத்த வேண்டாம். சிவனுக்குப் படைக்கும் எல்லா மலர்களும் பார்வதிதேவிக்கு உகந்தது. சிவனுக்குத் தாழம் பூ வைக்கவே கூடாது.

துர்க்கை :

🌺 சிவப்பு நிற மலர்களைத் துர்க்கைக்குச் சமர்ப்பணம் செய்யலாம். தாமரை, மல்லிகை, அரளி போன்ற வாசனை உள்ள பூக்களைப் பூஜைக்கு பயன்படுத்திக்கொள்ளலாம்.

விஷ்ணு :

🌺 விஷ்ணுவிற்கு தாமரை மலர் மிகவும் பிடித்தது. தாமரை, மல்லிகை, சம்பங்கி இவற்றைப் பூஜைக்குப் பயன்படுத்தலாம். விஷ்ணு பூஜையில் துளசி முக்கிய பங்கு வகிக்கின்றது.

மகாலட்சுமி :

🌺 தாமரையில் வீற்றிருக்கும் மகாலட்சுமிக்குத் தாமரை பூ தான் சிறந்தது. சாமந்தி, ரோஜா, பன்னீர் ரோஜா போன்ற வாசனை மிகுந்த பூக்களைப் பூஜைக்குப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

செய்யக்கூடாதவை :

🌺 பூக்களை மொட்டுக்களாக இறைவனுக்குச் சமர்ப்பிக்கக்கூடாது. சம்பங்கி மற்றும் தாமரையை மொட்டாகப் பயன்படுத்தலாம்.

🌺 தானமாக வாங்கிய பூக்களை இறைவனுக்குப் படைக்கக்கூடாது. பூக்களைப் பறித்த பிறகு சுத்தமான நீரில் கழுவிய பின்புதான் இறைவனுக்குப் படைக்க வேண்டும்.

🌺 துளசி இலைகளை மாலை நேரத்திலும், அமாவாசை மற்றும் பௌர்ணமி தினங்களிலும் பறிக்கக்கூடாது.