கோவை:
கோவையில் அதிமுக சார்பில் வாக்காளர்களுக்கு வழங்கப்படவிருந்த பரிசுபொருட்கள் பறிமுதல் செய்யபட்டது.

தமிழகத்தில் அடுத்த மாதம் 6-ந் தேதி சட்டசபை தேர்தல் நடக்கிறது. கடந்த மாதம் 26-ந் தேதி தேர்தல் தேதி அறிவித்ததும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிட்டன.

வாக்காளர்களுக்கு பணம் வினி யோகம் செய்வதை தடுக்க ஆவணங்கள் இல்லாமல் ரூ.50 ஆயிரத்துக்கு அதிகமாக பணம் கொண்டு செல்ல வேண்டாம் என்று அறிவிக்கப் பட்டு உள்ளது.

அத்துடன் கோவை மாவட்டத்தில் வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள் வழங்குவதை தடுக்க கண்காணிக்க பறக்கும் படை களும் அமைக்கப்பட்டு உள்ளன.

இந்த நிலையில் வாக்காளர்களுக்கு வழங்க வாகனங்களில் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொண்டு செல்லப்படுகின்றதா? என பறக்கும் படை அதிகாரிகள் மாவட்டம் முழுவதும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், கோவை இராமநாதபுரம் பகுதியில் அதிமுகவை சேர்ந்த பூத் ஏஜென்ட்
அனிதா, வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக ஜெயலலிதா படம் பொறித்த வேஷ்டி, சேலை, தட்டு போன்ற பரிசுபொருட்கள் அடங்கிய 68 பைகள் வைத்திருந்ததை பறக்கும் படை அதிகாரி சந்திர பிரியா தலைமையிலான அதிகாரிகள் நேற்று பறிமுதல் செய்துள்ளனர்.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சின்னவேடம்பட்டி, விளாங்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வீடுகளின் கதவுகளில் இரவு நேரங்களில் அதிமுகவினர் பரிசு பொருட்களை தொங்கவிட்டு சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.