சென்னை: சுவிக்கி, ஷொமட்டோ உள்பட உணவு பார்சல் டெலிவரி செல்லும் ஊழியர்கள் போலீஸ் சான்றிதழ் பெற வேண்டும் என சென்னை மாநகர காவல்ஆணையர்  மகேஷ்குமார் அகர்வால் அதிரடி உத்தரவிட்டு உள்ளார். உணவுபார்சல் என்ற பெயரில் போதைப்பொருட்கள் கடத்தப்படுவதை தவிர்க்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளார்.

சமீபகாலமாக சென்னையின் பல இடங்களில் உணவு பார்சல் டெலிவரி செய்வதுபோல, கஞ்சா விற்பனை நடைபெற்று வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நிலையில், சென்னை காவல்துறை புதிய அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.

சென்னை மாநகர காவல்ஆணையர் மகேஷ்குமார் அகர்வால்   சென்னை எழும்பூர் நரியங்காடு போலீஸ் குடியிருப்பில் ரூ.10 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள  சிறுவர்கள் விளையாட்டு பூங்கா, சிறுவர்-சிறுமிகள் விளையாடும் மைதானம், பெரியவர்கள் நடைபயிற்சி பாதை மற்றும் திறந்தவெளி உடற்பயிற்சி கூடம் போன்றவற்றை  நேற்று மாலை திறந்துவைத்தார். அதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, காவல்துறையினரைச் சேர்ந்த   குடும்பத்து பிள்ளைகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்யப்பட்டு வருவதாகவும், வரும் நவம்பர் மாதம் சென்னையில் போலீஸ் குடும்பத்து பிள்ளைகளுக்கு மிகப்பெரிய அளவில் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட இருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும்,  சென்னையில், உணவு பொருட்கள் பார்சல் வாகனங்கள் வாயிலாக சப்ளை செய்யும் நிறுவனங்களில் வேலை செய்பவர்களில் சிலர் கஞ்சா கடத்தல் போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுகிறார்கள் என்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இதனால்,  உணவு டெலிவரி செய்யும் அனைத்து நிறுவனங்களும்,   உணவு டெலிவரி வேலைக்கு ஆட்களை சேர்க்கும் போது, அவர்கள் போலீசாரின் நன்னடத்தை சான்றிதழ்கள் பெறவேண்டும் என்ற புதிய நடைமுறையை கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.