டில்லி

விரைவில் உள்நாட்டு விமானப் பயணத்துக்கு டிஜிட்டல் போர்டிங் பாஸ் முறை அமுலுக்கு வர உள்ளது.

விமானத்தில் பயணம் செய்வோர் போர்டிங் பாஸ் பெற்று அதை காட்டிய பிறகு விமானத்துக்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். ஒரு சில பயணங்களில் முன் கூட்டியே ஈ போர்டிங் பாஸ்கள் பெற்ற போதிலும் அதை விமான நிலைய கவுண்டர்களில் காட்டி அதன் பிறகு அவர்கள் ஒரு பிரிண்ட் அவுட் எடுத்துக் கொடுப்பது வழக்கமாக உள்ளது.

தற்போது மத்திய அரசு டிஜி யாத்திரா என்னும் புதிய விதிகளை அறிமுகப்படுத்தி உள்ளது. இதன் மூலம் அனைத்து சீட்டுகளையும் டிஜிடல் முறையில் மாற்றி காகிதமற்ற அனுமதிக்கு திட்டம் தீட்டி உள்ளது. இந்த விதிமுறைகளின் படி விமானப் பயணம் செய்வோர் அனைவரும் டிஜி யாத்ரா திட்டத்தின் கீழ் ஒரு தனிப்பட்ட எண்ணை பெற வேண்டும். இது ஒரு முறை பெற்றால் போதுமானது.

இந்த டிஜி யாத்ரா எண்ணை பெற பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, பான் அட்டை, ஓட்டுநர் உரிமம், மற்றும் அரசு அலுவலக பணியாளர் அடையாள் அட்டைகள் ஆகியவை தேவை. இவற்றைக் கொண்டு டிஜிடல் யாத்ரா எண்ணை ஒரு முறை பெற்றால் போதுமானது. அதே எண்ணைக் கொண்டு அடுத்த பயணங்களின் போது விமானம் ஏற முடியும்.

இந்த டிஜி யாத்ரா எண்ணைப் பெற விரும்பாதவர்கள் பழைய முறையில் அச்சடிக்கப்பட்ட டிக்கட்டுகள் மூலம் போர்டிங் பாஸ் உடன் விமானம் ஏறலாம். இந்த டிஜி யாத்ரா வசதி உள்நாட்டு பயணிகள் மட்டுமே பயன்படுத்த முடியும். வெளிநாட்டு பயணங்களுக்கு பல விதிமுறைகள் உள்ளதால் இந்த முறைக்கு அனுமதி இல்லை.