சென்ன‍ை: தமிழ்நாட்டில், அடுத்த 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது; வளிமண்டல சுழற்சியால் தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது.

அடுத்த 4 நாட்களுக்கு கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும். குமரி கடல் பகுதியில் 1.5 முதல் 2.1 கிலோ மீட்டர் உயரம் வரை வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதனால் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், தென் தமிழக மாவட்டங்களில் 2 நாட்களுக்கு லேசான மழைக்கு வாய்ப்பிருக்கிறது.

ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

எதிர்வரும் 13 மற்றும் 14ம் தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.