சென்னை: சுபஸ்ரீ மரண வழக்கில், முன்னாள் அதிமுக கவுன்சிலர் ஜெய கோபால் தமது பெயில் மனுவை வாபஸ் பெற்றிருக்கிறார்.

பள்ளிக்கரணையில் முன்னாள் கவுன்சிலர் ஜெய கோபால் என்பவரின் மகன் திருமண வரவேற்புக்காக சாலையின் நடுவே பேனர் வைக்கப்பட்டிருந்தது. திடீரென அந்த பேனர் விழுந்ததில் அவ்வழியே இரு சக்கர வாகனத்தில் சென்ற இளம்பெண் சுபஸ்ரீ என்பவர் பலியானார்.

தமிழகம் முழுவதும் அவரது மரணம் பெரும் அதிர்வலைகளை உண்டாக்கியது. பேனர் கலாச்சாரம் குறித்தும் கடும் விமர்சனங்கள் எழுந்தன. இது தொடர்பான வழக்கில் தலைமறைவாக இருந்த ஜெய கோபால் சமீபத்தில் கைது செய்யப்பட்டார்.

அவரது உறவினர் மேகநாதன் என்பவரும் கைது செய்யப்பட்டார். அந்த வழக்கில் தமக்கு ஜாமீன் வழங்குமாறு அவரது தரப்பில் சென்னை உயர் நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கு விசாரணையில் ஜெய கோபால் தரப்பில் இருந்து, தாக்கல் செய்யப் பட்டிருந்தது. அந்த ஜாமீன் மனுவை வாபஸ் பெறுவதாக தெரிவிக்கப்பட்டது.

அதை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், அவரது ஜாமீன் மனு விண்ணப்பத்தை நிராகரித்தது. ஏற்கனவே இருவரும் தாக்கல் செய்திருந்த ஜாமீன் மனுக்கள் செஷன்ஸ் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டிருந்தன.