சென்னை:

காங்கிரஸ் மூத்த தலைவரும்,  நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்தவருமான, அன்பரசு நேற்று இரவு காலமான நிலையில், அவரது உடல் இன்று பிற்பகல் தகனம் செய்யப்படும் என அவரது குடும்பத்தினர் அறிவித்து உள்ளனர்.

தனது, கல்வி நிறுவனத்தின் கட்டிடப் பணிகளுக்காக போத்ரா என்பவரிடம் ரூ. 35 லட்சத்தை கடன் வாங்கிய வழக்கில், அன்பரசுக்கு நீதி மன்றம் 2 ஆண்டுகள் தண்டனை விதித்தது. இதை சென்னை உயர்நீதி மன்றமும் கடந்த மாதம் உறுதி செய்தது.

இந்த நிலையில், சென்னை – குமனன்சாவடியில் வசித்து வந்த அன்பரசுக்கு நேற்று திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவரை போரூர் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு காலமானதாக அறிவிக்கப்பட்டது.

அவரது உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள நிலையில்,  அவரது இறுதிச்சடங்குகள் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. இன்று மாலை  காட்டுப்பாக்கத்தில் உள்ள மின்சார சுடுகாட்டில் அவரது  உடல் தகனம் செய்யப்படும் என அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.

அன்பரசுவின் மனைவி கமலா, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்.  இவர்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். மூத்த மகன் ஏற்கனவே இறந்து விட்டார். இளைய மகன் அருள் அன்பரசு முன்னாள் எம்.எல்.ஏ. ஆவார்.  மகள் சுமதி, திருமணமாகி கணவருடன் வசித்து வருகிறார்.

அன்பரசு உடலுக்கு முன்னாள் எம்.பி. கிருஷ்ணசாமி மற்றும் காங்கிரஸ் எம்.பி. விஷ்ணுபிரசாத் ஆகியோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ். அழகிரி இரங்கல் செய்தி வெளியிட்டு உள்ளார்.