பெங்களுரூ:
மிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சமீபத்தில், தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட தினேஷ் குண்டுராவ், முதல் முறையாக 2 நாட்களுக்கு முன்னர் சென்னை வந்தார். அவருக்கு, தமிழக காங்கிரஸ் கட்சியின் சார்பில், சென்னை விமான நிலையத்திலும் வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த வரவேற்பு நிகழ்ச்சியில், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, திருநாவுக்கரசர், இளங்கோவன், கே.வி.தங்கபாலு, பீட்டர் அல்போன்ஸ், கோபண்ணா, எஸ்.டி.நெடுஞ்செழியன் உட்பட, ஏராளமானோர் பங்கேற்றனர்.

பின்னர், அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலினை புதிதாக நியமிக்கப்பட்ட அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தமிழக பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் நேற்று முன்தினம் சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது, அவருடன் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், டி.ஆர்.பாலு, கே.என்.நேரு உள்ளிட்டோர் உடனிருந்தனர். இந்நிலையில், திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்த தினேஷ் குண்டுராவுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இதுகுறித்து தினேஷ் குண்டுராவ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- கோவிட் 19 பரிசோதனையில் எனக்கு அறிகுறி இருப்பது உறுதி செய்யப்பட்டது. என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்து கொள்ளுங்கள். மற்றவர்கள் கொரோனா பரவாமல் தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் . உங்கள் அனைவரின் விருப்பத்திற்கு ஏற்ப நான் விரைவில் குணமடைவேன் என்று பதிவிட்டுள்ளார். ஆகையால், அவருடன் தொடர்பில் இருந்த ஸ்டாலின், திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், தமிழக காங்கிரஸ் தலைவர்கள் உள்ளிட்டோர் தனிமைப்படுத்திக்கொள்ள திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.