சென்னை: 4 மணி நேர முன் அறிவிப்பில் நாடு முழுவதும் முழு ஊரடங்கு  சரியான முடிவா என்று பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் 6ம் கட்ட ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. கொரோனா பரவலுக்கு எதிரான போராட்டத்தில் சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுத்ததால் பாதிப்பு குறைவாக உள்ளதாக பிரதமர் மோடி தொடர்ந்து குறிப்பிட்டு வருகிறார்.
இந் நிலையில் பிரதமர் மோடிக்கு ப. சிதம்பரம் பல்வேறு கேள்விகளை முன்வைத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறப்பட்டு உள்ளதாவது:

கொரோனாவிற்கு எதிரான போராட்டத்தில் ‘சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுத்தோம்’ என்று பிரதமர் பெருமைப்பட்டுக் கொள்கிறார். கீழ்க்கண்ட முடிவுகள் சரியான முடிவுகளா? அவற்றை யார் எடுத்தது?.நான்கு மணி நேர முன் அறிவிப்பில் நாடு முழுவதும் முழு ஊரடங்கு – சரியான முடிவா?.

ரயில் இன்றி, பஸ் இன்றி பல இலட்சம் மக்கள் பல நாறு கிலோமீட்டர்கள் நடந்தே சென்று தமது சொந்த ஊர்களை அடைந்தார்களே – சரியான முடிவின் விளைவா? பல கோடி குறு, சிறு, நடுத்தர தொழில்கள் மூடப்பட்டு இன்னும் தொடங்கப்படாமல் இருக்கின்றனவே – இது சரியான முடிவுகளின் பயனா?ஊரடங்கு விதிகளைத் தளர்த்திய பிறகும் வேலையிழந்த கோடிக்கணக்கானவர்கள் இன்னும் வேலையில்லாமல் இருக்கிறார்களே – சரியான முடிவுகளின் பயனா? எனத் தெரிவித்துள்ளார்.