சென்னை:

முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், இலக்கியவாதியுமான பழ.கருப்பையா  திமுகவில் இருந்த விலகுவதாக அறிவித்து உள்ளார். இவர் முதலில் காங்கிரஸ் கட்சியில் இருந்த நிலையில், பின்னர் 2011ம் ஆண்டு அதிமுகவில் இணைந்தார். பின்னர், 2016ம்ஆண்டு திமுகவில் இணைந்தார். தற்போது, திமுகவில் இருந்து விலகுவதாக அறிவித்து உள்ளார்.

ஜெயலலிதாவுடன் பழ.கருப்பையா (அதிமுக)

திமுக தலைவராக இருந்த கருணாநிதி மறைவுக்குப் பிறகு, திமுகவில் முக்கியத்துவம் பெற முடியாமல் முடங்கி கிடந்த பழ.கருப்பையா, சமீபகாலமாக அதிமுகவுடன் சேர்த்து, திமுகவையும் விமர்சனம் செய்து வந்தார். இந்த நிலையில், திமுகவில் இருந்து விலகுவதாக அறிக்கை மூலம் அறிவித்து உள்ளார்.

கருணாநிதி, ஸ்டாலினுடன் பழ.கருப்பையா (திமுக)

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

“சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தபின் திமுகவில் சேர எனக்கு தயக்கம் இருந்தது. ஒரு பொதுவிழாவில் மிகைபடச் சொன்னாரோ என்ற அளவுக்கு கலைஞர் என்னை வலியுறுத்தி அழைத்தார்.

கலைஞர் மறைந்த அன்றே திமுகவிலிருந்து வெளியேறுவது குறித்து சிந்தித்தேன்.பாஜக எதிர்ப்புணர்வு, நாடாளுமன்றத் தேர்தல் இவற்றின் காரணமாக அந்த முடிவு தள்ளிக்கொண்டே போனது.

கழகத்தின் நிகழ்கால நடவடிக்கைகள், போக்குகள், சிந்தனைப் பாங்கு, ஒரு கார்ப்பரேட் நிறுவனம் போல கட்சியை நடத்துகிற விதம், அறிவும், நேர்மையும் பின்னுக்கு தள்ளப்பட்டு பணமே எல்லாம் என கருதுகிற தன்மை, இவையெல்லாம் என்னிடம் மிகப்பெரிய சலிப்பை உண்டாக்கின. இவற் றோடு பொருந்திப் போக முடியாத நிலையில் திமுகவிலிருந்து விலகுவது என முடிவெடுத்தேன். ஸ்டாலினை நேரடியாகப் பார்த்து விடையும் பெற்றேன்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், “ஊழல்வாதிகளை முன்னிலைப்படுத்துவது, ஊழலைப் பொதுவாழ்வின் அங்கமாக ஏற்பது, உட்கட்சிக்குள்ளேயே விமர்சிக்க முடியாத அளவுக்கு கட்சி விசுவாசம் என்ற பெயரில் அவற்றை நிலைநாட்டுவது, இவையெல்லாம் எந்த வகையிலும் பொதுவாழ்வுக்கு ஏற்புடையது அல்ல.

மாநிலங்கள் பல கூறுகளாக உடைந்து கிடப்பது, இந்தியாவை இந்து என்னும் பொது அடையாளத்துக்குள் கொண்டு வருவது, இவையெல்லாம் மொழி, இன உணர்வை சிதைக்கும் போக்குகளாகும்.

இதிலுள்ள ஆபத்துக்களை திமுக சரியாக புரிந்துகொண்டிருக்கிறது என என்னால் கருத முடியவில்லை. வெறும் ஒருநாள் அறிக்கைகளோடு இவை முடிந்துவிடுபவை அல்ல. கடந்த ஐம்பது ஆண்டுகளாக ஊழலே ஊழலை இடப்பெயற்சி செய்கிறது. மாற்று அரசியல் என்னும் கருத்தே என்னுடைய விலகலுக்கான காரணம்.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.