கடலூர் :

பாரதியஜனதாவின்  முன்னாள் மாநிலத் தலைவரான டாக்டர் கிருபாநிதி உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.

தமிழக பாரதியஜனதாவுக்கு  தலைவராக கிருபாநிதி கடந்த 2000வது ஆண்டு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த கிருபாநிதி, 1989ல் பாஜகவில் இணைந்தார். இவர் தான் முதல் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த தமிழக பாஜக தலைவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தொடக்கத்தில் கிருபாநிதி கடலூர் மாவட்டத் தலைவராக இருந்தார். பின்னர் மாநில துணைத்தலைவராகி பின்னர் பாஜக தலைவராக நியமிக்கப்பட்டார்.

வயது முதிர்வு காரணமாக அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்த கிருபாநிதி உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில்  இன்று கடலூரில் மரணமடைந்துள்ளார்.

மறைந்த கிருபாநிதி குடும்பத்தாருக்கு மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

அதில்,  தமிழக பாஜகவின் முன்னாள் மாநில தலைவர் Dr.SPகிருபாநிதி இயற்கை எய்தினார் என்ற செய்தி மிகுந்த மனவேதனையையும் வருத்தத்தையும் அளிக்கிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரின் ஆன்மா நற்பதியை அடைய எனது பிரார்த்தனைகள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.