போபால்
பி ஜே பி ஆளும் மாநிலங்களில் விவசாயிகளுக்கு நியாயம் கிடைக்கவில்லை என ஆர் எஸ் எஸ் தொண்டர் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார்.
சிவகுமார் சர்மா என்பவர் முன்னாள் ஆர் எஸ் எஸ் தொண்டர். தற்போது பாரதிய கிசான் சங்க் என்னும் விவசாயிகள் அமைப்பில் பணியில் இருந்து வந்தார். இவரை காக்காஜி எனவும் அழைக்கிறார்கள். இவர் விவசாயிகளுக்கு பி ஜே பி ஆளும் மாநிலங்களில் நியாயம் கிடைக்கவில்லை என குற்றம் சாட்டி உள்ளார்.
சர்மா தற்போது ராஷ்டிரிய கிசான் மஸ்தூர் சங்க் என்னும் அமைப்பைத் தொடங்கி நடத்தி வருகிறார். இவரே மத்திய பிரதேச விவசாயிகள் போராட்டக் குழுவின் தலைவர் எனவும் சொல்லப்படுகிறது.
இவர் விவசாயிகள் போராட்டம் பற்றி குறிப்பிட்டதாவது :
பி ஜே பி ஆளும் அனைத்து மாநிலங்களில் விவசாயிகளின் நலன் பாதுகாக்கப் படுவதில்லை. மத்தியப் பிரதேச முதல்வருக்கு பிரதமரிடம் இருந்து நிதியை கேட்கக்கூட தைரியம் இல்லை. மத்திய அரசு உதவாததால் இந்த மாநிலமே தவிக்கிறது.
மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் தற்போது நடைபெறும் போராட்டம் முதல் கட்டம்தான். அடுத்த கட்டம் இந்த போராட்டம் குஜராத், ராஜஸ்தான் ஆகிய மாவட்டங்களுக்கும் பரவும். இந்த மாநிலங்களும் பிஜேபி கட்சியால் ஆளப்படுபவை.
விரைவில் நாடு தழுவிய போராட்டம் நடைபெற உள்ளது. வரும் ஜூன் 16 அன்று விவசாயிகள் அனைத்து நெடுஞ்சாலைகளில் பகல் 12 மணியில் இருந்து 3 மணி வரை சாலை மறியல் செய்ய உள்ளார்கள்.
அடுத்தது யோகா தினமான ஜுன் 21ஆம் தேதி. அன்று அனைத்து விவசாயிகளும் ஒரு மணி நேரத்துக்கு பிணத்தைப் போல் படுத்து இருப்பார்கள். மோடி ஒரு மணி நேரம் அனைவருடனும் சேர்ந்து யோகாசனம் செய்யும் அதே நேரத்தில் இந்த நிகழ்வும் நடைபெறும்.
ஆனால் இந்த நிகழ்வு வீட்டிலோ, பூங்காவிலோ நடைபெறாது, ரெயில் தண்டவாளங்களிலும், ரெயில் நிலையங்களிலும், சாலை சந்திப்புகளிலும், பேருந்து நிலையங்களிலும் நடைபெறும். மோடி யோகா நடத்தும் அந்த ஒரு மணி நேரத்தில் இந்தப் போராட்டத்தினால் நாடே ஸ்தம்பித்து விடும்.
இவ்வாறு விவசாயிகளின் போராட்டம் பற்றி சர்மா கூறினார்.
அவர் மேலும் கடன் தள்ளுபடி பற்றிக் கூறியதாவது :
கடன் தள்ளுபடி என்பது வெறும் கண் துடைப்பு நடவடிக்கையே. உத்தரப் பிரதேசத்தில் கடன் தள்ளுபடி அறிவிக்கப் பட்டது. பிறகு அது நடுநிலை, மற்றும் கீழ்நிலையில் உள்ள விவசாயிகளுக்கு மட்டுமே என திருத்தப்பட்டது. பிறகு அது மேலும் குறைக்கப்பட்டு, ரூ 1 லட்சத்துக்கு குறைவாக உள்ள கடன்கள் மட்டுமே தள்ளுபடி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. வாக்குறுதிகள் என்பதே மீறப்படுவதற்கு மட்டுமே.
இவ்வாறு கடன் தள்ளுபடி பற்றி சர்மா கூறினார்.