சென்னை: சென்னையில் உள்ள அம்மா உணவகங்களை நிர்வகிக்க அறக்கட்டளை உருவாக்கி  தமிழகஅரசு அரசாணை வெளியிட்டு உள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்த உன்னதமான திட்டம் அம்மா உணவகம். இதன் குறைந்த விலையில்,  ஏழை எளிய மக்கள், கட்டிடப்பணியாளர்கள் என பல தரப்பினர் என அனைத்து தரப்பினரும் பசியாறி வருகின்றனர்.

தமிழகத்தை பொறுத்தவரை சென்னை மாநகரில் 407 உணவகங்களும் மற்ற மாநகராட்சி பகுதிகளில் 247 உணவகங்களும் செயல்பட்டு வருகிறது. இந்த உணவகங்களில் காலையில் இட்லி ரூ.1-க்கும், பொங்கல் ரூ.5-க்கும் விற்கப்படுகிறது. இதைபோல் மதியம் சாம்பார் சாதம், தயிர் சாதம், மல்லி சாதம் போன்ற சாத வகைகளும் மாலையில் சப்பாத்தியும் விற்கப்படுகிறது.

இந்த அம்மா உணவகம் மூலம் கொரோனா பொதுமுடக்கம் காலத்தில் தமிழகஅரசு ஏழை எளிய மக்களுக்கு விலையில்லா உணவு வழங்கி அசத்தியது. இதுவும் மக்களிடையே பெரும் வெற்றியை பெற்றது.

இந்த நிலையில், அம்மா உணவகங்களை  நிர்வகிக்க அறக்கட்டளை உருவாக்கப்பட்டு தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

அதன்படி, சென்னை மாநகராட்சி சுகாதார இணை ஆணையர் தலைமையில் 700-க்கும் மேற்பட்ட அம்மா உணவகங்களை நிர்வகிக்க தனி அறக்கட்டளை செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.