டில்லி:
பிளஸ் 2 தேர்வில் சிறந்த மதிப்பெண் பெறும்  மாணவியரில் 1,000 பேரை தேர்வு செய்து, மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் இலவசமாக படிக்க மத்திய அரசு  உதவுகிறது. “உதான்” என்ற திட்டம் மூலம் இந்த உதவி அளிக்கப்படுகிறது.
கேந்திரிய வித்யாலயா, ஜவஹர் நவோதயா வித்யாலயா, மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பள்ளிகள் மற்றும் மாநில அரசு பாடத்திட்ட மாணவியர்  இத் திட்டத்தின் மூலம் பலன் பெறலாம்.  பிளஸ் 1 படிக்கும் போதே, இந்த திட்டத்துக்கு ஒவ்வொரு ஆண்டும், மாணவியர் தேர்வு செய்யப்படுவர்.
10
அவர்களுக்கு இரு ஆண்டுகள் பயிற்சி அளிக்கப்படுகிறது. அவர்கள், உதான் திட்ட வகுப்புகளில், கண்டிப்பாக பங்கேற்க வேண்டும். ஆன்-லைன் வழியாகவும், நேரடியாகவும் சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும். பயிற்சி புத்தகம், ‘டேப்லெட்’ இலவசமாக  அளிக்கப்படும். மாணவியர் தங்கள் சந்தேகங்களை தெளிவுபடுத்திக்கொள்ள, ‘ஹெல்ப் லைன்’ வசதியும் உண்டு.
இத்திட்டத்தில் சேர்ந்து பயன்பெற விரும்பும் மாணவியர், 10ம் வகுப்பு தேர்வில் குறைந்தபட்சம், 70 சதவீத மதிப்பெண்ணும்,  கணிதம், அறிவியல் பாடங்களில், 80 சதவீத மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும். பிளஸ் 1 வகுப்பில், கணிதம் மற்றும் அறிவியல் பாடப்பிரிவில் சேர்ந்திருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் மாணவியர் ஐ.ஐ.டி., – என்.ஐ.டி., போன்றவற்றில், பி.இ., – பி.டெக் உட்பட தாங்கள் விரும்பும் படிப்பை முற்றிலும் இலவசமாக படிக்கலாம்.
“உதான்” திட்டத்தில் இந்த ஆண்டு சேர விரும்பும் மாணவியருக்கான ஆன்லைன் பதிவு, கடந்த, 4ம் தேதி துவங்கியுள்ளது. வரும் 13ம் தேதி வரை, www.cbseacademic.in என்ற இணையதளத்தில் பதிவு செய்துகொள்ள வேண்டும்.