மும்பை:

தொலைதொடர்பு துறையில் முன்னணி நிறுவனமான ரிலையன்ஸ் குழுமத்தின்  வருடாந்திர மாநாடு இன்று நடைபெற்றது. இதில்,  ஜியோ ஜிகா ஃபைபர்  அறிமுகம்; அளவில்லாத இலவச கால்கள், அதிவேக இணையம், சந்தாதாரர்களுக்கு இலவச எல்இடி டிவி என பல்வேறு அதிரடி அறிவிப்புகளை  ரிலையன்ஸ் நிறுவனர் முகேஷ் அம்பானி வெளியிட்டு உள்ளார்.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின்  42 வது வருடாந்திர கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொள்ள வந்த முகேஷ் அம்பானி, தாய் கோகிலா பென், மனைவி நீடா அம்பானி ஆகியோருடன் வருகை தந்தார்.

கூட்டத்தில் பேசிய முகேஷ் அம்பானி,  ஜியோ இணைய சேவை தொடங்கப்பட்ட 3 ஆண்டுகளில் 34 கோடி வாடிக்கையாளர்களைக் கொண்ட நிறுவனமாக உயர்ந்துள்ளது. அடுத்ததாக 4 புதிய வளர்ச்சி இயந்திரங்களைப் புகுத்த இருக்கிறோம் என்று கூறினார்.

அதன்படி, நாடு முழுவதும் இணையம், வீடுகளுக்கு இணையம், நிறுவனங்களுக்கான பிராட் பேண்ட் சேவை, சிறுதொழில் நிறுவனங்களுக்கான பிராட்பேண்ட் சேவை ஆகியவை எங்கள் திட்டமாகும்.

இந்த நிதியாண்டிலேயே இந்த 4 திட்டங்கள் மூலம் வருவாய் கிடைக்கத் தொடங்கும் என்றவர்,  ஜியோ ஜிகா ஃபைபர் திட்டத்தில் குறைந்தபட்சம் ரூ.700 வாடகை முதல் அதிகபட்சம் ரூ.10 ஆயிரம் வரை திட்டங்கள் இருக்கின்றன.

மேலும், அளவில்லா இலவச அழைப்புகள், அதிவேகமான 100 எம்பிபிஎஸ் வேகத்தில் இணையதளம், வாழ்நாள் சந்தாதாரராக இணைபவர்களுக்கு இலவச எல்இடி டிவி  வழங்கப்படும் என்றும் அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளார்.

தொடர்ந்து பேசியவர், 4ஜி சேவைக்காக ரிலையன்ஸ் ஜியோ  இதுவரை ரூ.3.5 லட்சம் கோடி முதலீடு செய்யப்பட்டு  இருப்பதாக தெரிவித்தவர்,  கடந்த 3 ஆண்டுகளில் மிகப்பெரிய வளர்ச்சியை ஜியோ அடைந்துள்ளது. நாட்டில் மட்டும் மிகப்பெரிய சேவைதாரராகவும், உலகிலேயே 2-வது மிகப்பெரிய சேவைதாரராகவும் மாறி இருக்கிறோம் என்று பெருமிதம் கொண்டார்.

ஜியோ நிறுவனத்துக்கான முதலீடு முடிந்துவிட்டது. இனிமேல் குறுகிய அளவில் பல்வேறு பகுதிகளில் வளர்ச்சிக்காக மட்டுமே முதலீடு தேவை.

மிகவும் எதிர்பார்த்திருந்த ஜியோ ஜிகா ஃபைபர் திட்டம் வரும் செப்டம்பர் 5-ம் தேதி நடைமுறைக்கு வருவதாக கூறியவர்,  வீடுகளுக்கு ஃபைபர் கேபிள்கள் மூலம் பிராட்பேண்ட் சேவை வழங்கும் ஜியோ ஜிகா ஃபைபர் திட்டத்தில் இதுவரை 1.50 கோடிபேர் முன்பதிவு செய்து உள்ளனர் என்றும், இந்த திட்டம் நடைமுறைக்கு வரும்போது 2 கோடி வீடுகள், 1,600 நகரங்களில் 1.5 கோடி வர்த்தக நிறுவனங்களை ஏற்படுத்தித் தரும் என்று நம்பிக்கை தெரிவித்தவர்,  தற்போது சோதனை முயற்சி யாக ஜியோ ஜிகா ஃபைபர் திட்டம் 2016-ம் ஆண்டு முதல்  5 லட்சம் வீடுகளில் செயல்பாட்டில் இருந்து வருவதாகவும் கூறினார். வரும் செப்டம்பர் 5-ம் தேதி முதல் முறைப்படி அறிமுகமாகும் என்றும்  முகேஷ் அம்பானி தெரிவித்தார்.

ஜியோ ஃபைபர் திட்டத்தில் வீடுகளில் இணைப்பு பெற்ற பின் இந்தியா முழுவதும் இலவசமாக மொபைல், லேண்ட் லைனில் பேச முடியும், இதன் பிராட்பேண்ட் இணையதள வேகம் 100 எம்பிபிஎஸ் ஆகவும் அதன்பின் 1 ஜிபிபிஎஸ் ஆகவும் மாறும்.

சர்வதேச அளவில் பேசுவதற்கு குறைந்த கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் கனடாவுக்கு அளவில்லாமல் பேசுவதற்கு மாதத்துக்கு ரூ.500 செலுத்தி பேசும் திட்டம் இருக்கிறது.

2020-ம் ஆண்டில் ஜியோ ஜிகா ஃபைபர் திட்டத்தில் புதிய திரைப்படங்கள் பார்க்கும் வசதி அறிமுக மாகிறது. இதன்படி, திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் திரைப்படங்களை அன்றே ஜிகா ஃபைபர் பிரீமியம் வாடிக்கையாளர்கள் பார்க்க முடியும்.

ஜியோ ஃபைபர் வெல்கம் ஆஃப் எனும் திட்டமும் அறிமுகமாகிறது. இதன்படி வாடிக்கையாளர்கள் ஆண்டு சந்தாவைத் தேர்வு செய்தால், அவர்களுக்கு இலவசமாக எச்டி எல்இடி தொலைக்காட்சி அல்லது 4கே டிவி மற்றும் 4கே செட்டாப் பாக்ஸ் இலவசமாக வழங்கப்படும்.

முகேஷ் அம்பானியின் அதிரடி அறிவிப்பு  பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.