சென்னை:

மிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பிளஸ்2 படிக்கும் மாணவர்கள், நீட் , ஜேஇஇ போன்ற தேசிய தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் தமிழக அரசு சார்பில் இலவசமாக கோச்சிங் கொடுக்கப்பட்டு வருகிறது.  அதன்படி, இந்த ஆண்டு சேர்ந்துள்ள மாணவ மாணவிகளுக்கான  இலவச பயிற்சி வகுப்புகள் நாளை தொடங்க உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

மருத்துவப்படிப்பு நுழைவு தேர்வான நீட் தேர்வை எதிர்கொள்ள தமிழகஅரசு கடந்த இரண்டு ஆண்டுகளாக இலவசமாக அரசு பள்ளி மாணவர்களுக்கு கோச்சிங் கொடுத்து வருகிறது. இதற்கான தமிழகம் முழுவதும்  412 பயிற்சி மையங்களை பள்ளிக்கல்வித்துறை அமைத்துள்ளது.

இந்த பயிற்சி மையங்களில் நாளை முதல், மாணவ மாணவிகளுக்கு பயிற்சி தொடங்குகிறது, தொடர்ந்து காலாண்டு விடுமுறை தினங்களிலும் பயிற்சி நடைபெற உள்ளது. நாளை முதல் தொடர்ச்சியாக 5 நாட்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடைபெறும். பின்னர் வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பயிற்சி வகுப்புகள் நடக்கும்.

பயிற்சி நேரம், காலை 9.30 மணி முதல் பிற்பகல் 12.40 மணி வரையிலும், பிற்பகலில், 1.10 மணி முதல் 4.20 மணி வரையிலும் பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளன.

இரண்டு நாட்களுக்கு ஒருமுறை, முந்தைய நாட்களில் நடத்தப்பட்ட பாடங்களின் அடிப்படையில் தேர்வு நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு, குஜராத்தைச் சேர்ந்த Etoos India நிறுவனத்தின் தொழில்நுட்ப உதவியுடன், அரசு ஆசிரியர்களைக் கொண்டு நீட் மற்றும் ஜே.இ.இ. தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

இந்த பயிற்சிக்கு ஏற்கனவே   மாவட்டத்துக்கு 10 ஆசிரியர்கள் வீதம் 32 மாவட்டங்களில் 320 முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு பயிற்சி கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.