சென்னை: அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணாக்கர்களுக்கான இலவச  ‘நீட்’ தேர்வு  பயிற்சி வகுப்புகள் வருகிற 1-ந் தேதி முதல் தொடங்கும் என்று பள்ளி கல்வித்துறை அறிவித்து இருக்கிறது.

இளநிலை மருத்துவப்படிப்புகளான   எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளில் சேர  நீர் தேர்ச்சி கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகஅரசு, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இலவசமாக நீட் உள்பட பல்வேறு தேர்வுகளுக்கான பயிற்சிகளை வழங்கி வருகிறது. அதன்படி, 2021ம் ஆண்டு நடைபெற உள்ள நீட் தேர்வை எதிர்கொள்ளும் வகையில், நீட் இலவச பயிற்சி வகுப்பு நவம்பர் 1ந்தேதி முதல் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து பள்ளி கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கடந்த ஆண்டை போலவே நடப்பு கல்வியாண்டுக்கான இலவச ‘நீட்’ தேர்வு பயிற்சி வகுப்புகளை இ-பாக்ஸ் நிறுவனமே வழங்க இருக்கிறது. இதற்கான பயிற்சி வகுப்புகள் நவம்பர் மாதம் 1-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) முதல் ஆன்லைன் மூலம் தொடங்கப்பட இருக்கிறது.

பயிற்சி வகுப்புகளில் சேர விருப்பம் உள்ள மாணவ-மாணவிகளின் பெயர், முகவரி, செல்போன் எண் போன்ற விவரங்களை பெற்று உடனடியாக பள்ளி கல்வி இயக்ககத்துக்கு அனுப்பி வைக்கவேண்டும். அதிகளவிலான மாணவர்கள் பயன்பெறும் வகையில் இதனை கொண்டு செல்ல வேண்டும்.

இந்த இலவச ஆன்லைன் ‘நீட்’ தேர்வு பயிற்சி வகுப்புகளை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் வெற்றிகரமாக நடத்திட வேண்டும்.

இவ்வாறு கூறியுள்ளார்.

கடந்த ஆண்டு இ-பாக்ஸ் என்ற நிறுவனம் மூலம் அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு ‘நீட்’ தேர்வு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டது. அதையடுத்த நீட் தேர்வில் கலந்துகொண்டவர்களில்  1,633 பேர் தேர்ச்சி பெற்று இருப்பது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதன் காரணமாகவே, தமிழகஅரசு 7.5 சதவிகித உள்ஒதுக்கீடு சட்டமும் கொண்டு வந்துள்ளது.