சென்னை:
புதுச்சேரி மாநிலத்தில் 3 மாதங்களுக்கு ரேசன் கடைகளில் இலவச அரிசி வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதை சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்து உள்ளது.

கொரானா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் கடந்த 4 மாதம் முதல் ஊரடங்கு அமலில் உள்ளது.  இதனால் பொதுமக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. 

இந்த நிலையில், புதுச்சேரி மாநில மக்களுக்கு ரேசன் கடைகள் மூலம்  குடும்ப அட்டைதாரர்களுக்கு 3 மாதங் களுக்கு இலவச அரிசி வழங்க வேண்டும் என முதல்வர் நாராயணசாமி மத்தியஅரசை வலியுறுத்தினார். ஆனால், மாநில ஆளுநர் கிரண்பேடி, ரேசன் கார்டுதார்களுக்கு இலவசமாக அரிசி வழங்குவதற்கு பதிலாக, அவர்களின் வங்கிக் கணக்கில் பணமாக வழங்க வேண்டும் என்று  உத்தரவிட்டார். 
இதை எதிர்த்து,  புதுவை முதல்வர் நாராயணசாமி வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கின் கடந்த விசாரணையின்போது, மனு குறித்து பதில் அளிக்க மத்தியஅரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது.
வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது,  அரசின் கொள்கை முடிவில் ஆளுநர் தலையிட முடியாது என்று புதுச்சேரி அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இதற்கு பதில் அளித்த மத்தியஅரசு வழக்கறிஞர், புதுச்சேரி மாநில மக்களுக்கு, 3 மாதங்களுக்கு இலவச அரிசி தர ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.