டெல்லி: நவோதயா பள்ளி மாணவர்களுக்கு இலவச பாடப்புத்தகங்களுடன் டேப்லெட்”  வழங்க முடிவு செய்துள்ளதாக  மத்திய அமைச்சர்  தெரிவித்துள்ளார்.

அனைத்து ஜவஹர் நவோதயா வித்யாலயாக்களையும் (ஜே.என்.வி) நடத்தும் நவோதயா வித்யாலயா சமிதி நடத்திய 40 வது செயற்குழு கூட்டம் டெல்லியில் நடைபெற்றது.  மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில்  கல்வித்துறை இணை அமைச்சர் சஞ்சய் தோத்ரே (மோஸ்)  கலந்து கொண்டார்.

இக்கூட்டத்தில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச பாடப்புத்தகங்கள், 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு டேப்லெட்டுகள், விடுதிகள் மற்றும் பள்ளிகளை மேம்படுத்த சி.எஸ்.ஆர் நிதிகளை திரட்டுவதற்கான வழிகள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

அத்துடன் கொரோனா பெருந்தொற்று குறைந்துள்ள நிலையில் அதன் பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கைகள் நடவடிக்கைகள் குறித்தும், இனி வரும் காலங்களில் டிஜிட்டல் கல்வி முறை மேம்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

மேலும், இமயமலை மற்றும் ஜம்மு-காஷ்மீர் பிராந்தியங்களுக்கான சிறப்பு ஆட்சேர்ப்பு இயக்கம், அடுத்த ஆண்டு முதல் புதிய இடமாற்றக் கொள்கையை அமல்படுத்துதல் மற்றும் பொறியியல் பணியாளர்களுக்கான ஆட்சேர்ப்பு விதிகளை திருத்துதல் உள்ளிட்டவை குறித்தும் முடிவெடுக்கப்பட்டது.

அத்துடன் நவோதயா முன்னாள் மாணவர்கள் பள்ளிகளை தத்தெடுக்கவும் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

கூட்டத்தில் பேசிய கல்வித்துறை இணை அமைச்சர் சஞ்சய் தோத்ரே, இப்பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகளை முன்னுரிமை அடிப்படையில் மேம்படுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.