பாரிஸ்

கியூபா மருத்துவ நிபுணர்களுக்கு அமைதிக்கான நோபல் பரிசு அளிக்க ஒரு பிரான்ஸ் தன்னார்வு நிறுவனம் பரிந்துரை செய்துள்ளது.

உலக நாடுகளில் தொற்று நோய் தலை எடுக்கும் போது எல்லாம் கியூபா நாட்டு மருத்துவ நிபுணர்கள் அந்த நாடுகளுக்குச் சென்று தங்கள் சேவைகளை அளித்து வருகின்றனர்.  ஏற்கனவே சார்ஸ், எபோலோ தொற்று பரவுதலின் போது இந்நாட்டு மருத்துவக் குழுவினர் பல நாடுகளுக்கும் சென்று மருத்துவச் சேவை அளித்துள்ளனர்.   இதையொட்டி பல உலக நாடுகளும் கியூபாவுக்கு பாராட்டுகளைத் தெரிவித்துள்ளது.

தற்போது பல உலக நாடுகளில் கொரோனா தொற்று கடுமையாக உள்ளது.  உலக அளவில் பாதிப்பு 31 லட்சத்தைத் தாண்டி உள்ளது.   இதுவரை 2.17  லட்சத்துக்கும் அதிகமானோர் உயிர் இழந்துள்ளனர்.  கொரோனாவால் அமெரிக்கா அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.  அதற்கு அடுத்த படியாக ஐரோப்பிய நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன

இந்த கொரோனா பாதிப்புக்காகக் கியூபா நாடு தனது மருத்துவக் குழுவினரைச் சிகிச்சைக்கு அனுப்பி உள்ளது.  நேற்று வரை உலகின் 21 நாடுகளுக்கு கியூபா நாட்டைச் சேர்ந்த மருத்துவர்கள், செவிலியர்கள், சிறப்பு நிபுணர்கள் ஆகியோரின் குழு அனுப்பப் பட்டுள்ளது.  இந்த குழு கடந்த 1998 முதல் தனது சர்வதேச சேவைகளைத் தேவைப்படும் போதெல்லாம் செய்து வருகிறது.

இதையொட்டி பிரான்ஸ் நாட்டில் உள்ள ஒரு தன்னார்வு நிறுவனம் கியூபா மருத்துவ நிபுணர்களுக்கு அமைதிக்கான நோபல் பரிசை வழங்க வேண்டும் எனப் பரிந்துரைத்துள்ளது.   கியூபா மருத்துவக் குழுவினரின் கொரோனா சிகிச்சை சேவைக்காக இந்த விருது வழங்கப்பட வேண்டும் என அந்நிறுவனம் பரிந்துரையில் தெரிவித்துள்ளது.