டெல்லி: நாடு முழுவதும் 60 வயதைக் கடந்தவர்களுக்கும்,  மார்ச் 1-ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

உலகநாடுகளை மிரட்டி வரும் கொரோனாவை கட்டுப்படுத்த, தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்துள்ள. உலக நாடுகள் முழுவதிலும் தடுப்பூசிகள் 2 டோஸ்களாக போடும் பணி நடைபெற்று வருகிறது. இந்தியாவிலும் கடந்த  ஜனவரி 16-ம் தேதி முதல் நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது.

முதல்கட்டமாக, கொரோனா பணியில் ஈடுபட்டு வரும்,  அரசு மற்றும் தனியார்துறையில் பணியாற்றும் 3 கோடி முன்களப் பணியாளர்களுக்கு இலவசமாக தடுப்பூசி போடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, கொரோனா தடுப்பூசி போடப்படுவருகிறது. முதல் டோஸ் போடப்பட்டு 28 நாட்களை கடந்தவர்களுக்கு 2வது டோஸ் தடுப்பூசி போடும் பணியும் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில்,  இரண்டாவது கட்டமாக தடுப்பூசி போடும் பணி மார்ச் 1ந்தேதி தொடங்க உள்ளது. அதன்படி,  60 வயதைக் கடந்தவர்களுக்கும், 45 வயதைக் கடந்த இணை நோய்கள் உள்ளவர்களுக்கும் கொரோனா தடுப்பு மருந்து வழங்கப்படும் என்று என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், ‘மார்ச் 1-ம் தேதி முதல் 60 வயதைக் கடந்தவர்களுக்கும் 45 வயதைக் கடந்த இணை நோய்கள் உள்ளவர்களுக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் என்றார்.

மேலும் தடுப்பூசி போடும் பணியில்  நாடு முழுவதும் 10,000 அரசு மருத்துவ மையங்களும், 20,000 தனியார் மருத்துவமையங்களும் ஈடுபட்டு வருவதாகவும்,  அரசு மையங்களில் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும்’ என்று தெரிவித்துள்ளார்.