கோவை

ன்று முதல் தமிழகம் முழுக்க, பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மட்டும், பள்ளிகள்  திறக்கப்படுகின்றன.

கடந்த மார்ச் இறுதியில் கொரோனா தொற்று காரணமாக மூடப்பட்ட பள்ளிகள், ஒன்பது மாதங்களுக்குப் பிறகு, இன்று திறக்கப்படுகிறது.  குறிப்பாகப் பொதுத்தேர்வு எழுதும் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு மட்டும், கற்பித்தல் பணிகள் துவங்கப்படுகின்றன. நீண்டகால இழுபறிக்குப் பிறகு 35 % குறைக்கப்பட்ட சிலபஸ் வெளியிடப்பட்டுள்ளது.  பள்ளிகளுக்கு இன்று முதல் மாணவர்கள் வரத் தொடங்க உள்ளதால், நேற்று முழுவதும், அனைத்து உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளிலும் வகுப்பறைகள், கழிவறைகள், வளாகம் சுத்தப்படுத்தும் பணி நடந்தது.

இவ்வாறு தூய்மைப்படுத்தப்பட்டுள்ளதை உறுதி செய்ய, ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் செயலர் சேதுராமவர்மா தலைமையில், கோவை மாவட்ட பள்ளிகளில், ஆய்வு பணிகள் நடக்கின்றன. கோவை மாவட்ட கல்வி அலுவலர்கள், வட்டார கல்வி அலுவலர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள் குழுவாகப் பிரிக்கப்பட்டு, அனைத்து பள்ளிகளையும் மேற்பார்வையிடுகின்றனர்.  மாணவர்கள் இன்று பள்ளிக்கு வரும்போது, பெற்றோரின் ஒப்புதல் படிவம்,பெறப்படுகிறது.

மாணவர்கள் உடல் வெப்பநிலை சரிபார்த்து பிறகு வகுப்பறைக்குள் அனுமதிக்கப்படுவர்.  அனைத்துப் பள்ளிகளிலும் சுகாதாரத்துறை இணை இயக்குநர் தலைமையில், மாணவர்களுக்கு இன்று முதல் மருத்துவ முகாம் நடத்தப்படும். இந்த முகாமில், தொற்றில் இருந்து தற்காத்துக் கொள்ளும் முறை குறித்து விளக்கப்படும். ஒவ்வொரு வகுப்பறையிலும் 25 மாணவர்கள் வீதம் பிரிக்கப்பட்டுள்ளதால், கால அட்டவணை தயாரிக்கப்பட்டு, ஆசிரியர்கள் கையாள வேண்டிய பாட அட்டவணையும் உருவாக்கப்பட்டுள்ளது.

முதன்மை கல்வி அலுவலர் உஷா கூறுகையில், ”அரசின் அனைத்து வழிகாட்டி நெறிமுறைகளும் பின்பற்றுவதை உறுதி செய்ய, குழு அமைக்கப்பட்டுள்ளது.  தற்போது குறைக்கப்பட்ட சிலபஸ்க்கு ஏற்ப, பாட அட்டவணை உருவாக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் எவ்வித அச்சமும் இன்றி பள்ளிக்கு வரலாம். வருகைப்பதிவு கட்டாயமில்லை. ஆன்லைன் முறையிலும், கற்பிக்கும் நடைமுறை தொடரும். மூன்று நாட்களுக்கு, பொதுத்தேர்வு குறித்த பயம், பதற்றத்தில் இருந்து விடுவிக்க, மாணவர்களுக்கு கவுன்சிலிங் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது,” எனத் தெரிவித்துள்ளார்.

இதையொட்டி அரசின் வழிகாட்டி நெறிமுறைகள் பின்பற்றப்படுவதை உறுதிசெய்ய, அதிகாரிகள் குழு, பள்ளிகளை ஆய்வு செய்து வருகிறது.