சென்னை

ன்று முதல் டாஸ்மாக் மதுபானக் கடைகள் பகல் 12 மணி முதல் இரவு 10 வரை திறந்திருக்கும் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது.

கடந்த மார்ச் 25 முதல் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடெங்கும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.  அதையொட்டி தமிழகத்தில் உள்ள 5300 டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூடப்பட்டன.

கடந்த மே மாதம் 7 ஆம் தேதி முதல் பல்வேறு தளர்வுகளின்படி 3700 மதுக்கடைகள் திறக்கப்பட்டன.   அப்போது சென்னை நகர காவல்துறை கட்டுப்பாட்டுப் பகுதிகள் மற்றும் கொரோனா காரணமாகக் கட்டுப்படுத்தப்படட  பகுதிகளில் திறக்கப்படவில்லை.

அதன் பிறகு ஆகஸ்ட் 18 ஆம் தேதி முதல் சென்னையிலும் டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்பட்டன.  அப்போது முதல் இந்த கடைகள் சென்னை நகரில் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் மற்ற பகுதிகளில் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் இயங்கி வந்தன.

இன்று முதல் தமிழக அரசு ஊரடங்கு விதிகளில் பல தளர்வுகள் அறிவித்துள்ளது.  அதன்படி டாஸ்மாக் மதுக்கடைகள் இன்று முதல் நண்பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை இயங்க உள்ளது.