சென்னை: கொரோனாவால் உயிரிழந்த மருத்துவரும், தமது கணவருமான  சைமனின் கடைசி ஆசையை நிறைவேற்ற, முதலமைச்சர் உதவ வேண்டும் என்று அவரது மனைவி கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கொரோனா பாதிப்பால் சென்னையில் மருத்துவர் சைமன் ஹெர்குலஸ் என்பவர் பலியானார். அவரது உடலை, கீழ்ப்பாக்கம் கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்யவிடாமல் மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக 21 பேர் கைது செய்யப்பட்டு, அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

இந்நிலையில், அவரது மனைவி ஆனந்தி சைமன் உருக்கமாக பேசி ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், தனது கணவரின் உடல் புதைக்கப்படுவதை கூட கண்ணால் பார்க்க கூட முடியவில்லை என்றார்.

தனது குடும்பத்தினருடன், சைமன் கடைசியாக பேசிய வீடியோ அழைப்பில், ஒருவேளை மீண்டு வரவில்லை என்றால், அவரது மதச் சடங்குகளின்படி கீழ்ப்பாக்கத்தில் அடக்கம் செய்யுமாறு கூறியதாக ஆனந்தி சைமன் உருக்கமாக தெரிவித்தார்.

ஆகையால், கணவரின் கடைசி ஆசையை நிறைவேற்ற முதலமைச்சர் உதவி செய்ய வேண்டும் என்று ஆனந்தி சைமன் கண்ணீருடன் வேண்டுகோள் விடுத்தார்.