கன்னியாகுமரி: மீனவர்களை கடந்த இரு நாட்களாக மிரட்டிவந்த கன்னியாகுமரி கடல் சீற்றம் தற்போது சற்று தணிந்து காணப்படுகிறது. அதனால் அங்கு இயல்பு நிலை திரும்பி இருக்கிறது.

குமரி மாவட்டத்தில் கடந்த இரு தினங்களாக வீசிய கடற்பேரலையில் ஏராளமான வீடுகள் இடிந்து தரைமட்டமானது.  குளச்சல், தேங்காய்பட்டினம், நீரோடி, மார்த்தாண்டம் போன்ற பகுதிகளில் கடல் தொடர்ந்து பெரும் சீற்றத்துடன் காணப்பட்டு மீனவர்களை அச்சுறுத்தி வந்தது. கொட்டில்பாடு, ராஜக்கமங்கலம் போன்ற கடற்கரை பகுதிகளில் 10 முதல் 15 அடி உயர அலைகள் எழும்பி பீதியை ஏற்படுத்தின.  வீடுகள் பலவற்றில் கடல் நீர் புகுந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது.

மேலும் தேங்காய்பட்டினம், இரயுமன் துறையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 5 படகுகளை கடல் அலை அடித்துச்சென்றது. இதையடுத்து  கடந்த இரு நாட்களாக  மாவட்ட மக்கள் பீதியில் உறைந்தனர்.

இந்த நிலையில், இன்று குமரி மாவட்டத்தில் இயல்பு நிலை திரும்பியுள்ளது. இதனால் மீனவ மக்கள் ஓரளவு நிம்மதி அடைந்துள்ளனர். ஆனாலும் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் செல்லவில்லை. கடலின் சூழ்நிலையை நன்கு கணித்த பிறகே மீன்பிடிக்கச் செல்ல முடிவு செய்துள்ளதாக மீனவர்கள் கூறினர்.