திருச்சி: 

திருச்சியில் பிரபலமாக செயல்பட்டு வரும் காந்தி மார்க்கெட்டை அங்கிருந்து அகற்ற ஆளும் கட்சி முடிவு செய்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் வணிகர்கள், காந்தி மார்க்கெட்டை இடம் மாற்றம் செய்ய மாட்டோம் என்று உறுதி அளிக்கும் கட்சிக்குத்தான் எங்கள் ஓட்டு என்று போஸ்டர் அடித்து ஒட்டி அரசியல் கட்சிகளுக்கு கெடு  விடுத்துள்ளனர்.

விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் பல்வேறு வாக்குறுதிகள் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில்,  திருச்சி காந்தி சந்தை வியாபாரிகள் சங்கம் சார்பில், அரசியல் கட்சிகளுக்கு கெடு விதித்து போஸ்டர்களை ஒட்டியுள்ளனர்.

மூன்று தலைமுறையாக இந்த இடத்தில் செயல்பட்டு வரும் ‘காந்தி சந்தையை இடம் மாற்றம் செய்யக் கூடாது, பழைய இடத்திலேயே நிரந்தரமாகத் தொடர வேண்டும் என்று  உறுதியளிக்கும் கட்சிக்கு மட்டுமே ஆதரவு’ என்கிற பிரம்மாண்ட சுவரொட்டிகளை அப்பகுதியில் ஒட்டியுள்ளனர்.

அந்த சுவரொட்டியில், அனைத்து கட்சிகளின் கொடி மற்றும் சின்னங்கள் அச்சிடப்பட்டு உள்ளதுன். அத்துடன தங்களின்  கோரிக்கையை எந்தவொரு கட்சியும் நிறைவேற்ற முன்வரா விட்டால், நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிப்போம் என்றும் கோரிக்கையை ஏற்றால் அந்த கட்சிக்காக வாக்கு சேகரிப்போம் என்றும் கெடு விதித்து உள்ளனர்.

இதன் காரணமாக அரசியல் கட்சிகள் செய்தவறியாது திகைத்து வருகின்றன. ஏற்கனவே, காந்தி சந்தை மூடப்பட்டு கிடப்பதால் சுமார் 3 ஆயிரம் வணிகர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு இருப்பதாக போர்க்கொடி தூக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது தேர்தலை மையமாக வைத்து கெடு விதித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.