வாஷிங்டன்: அமெரிக்க அகிம்சை இயக்கத்தின் ஆன்மீக தலைவராக திகழ்பவர் காந்தியடிகள் என்று புகழாரம் சூட்டியுள்ளார் அந்நாட்டு நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் நான்ஸி பெலோஸி.

அமெரிக்காவின் சக்திவாய்ந்த பெண்மணியாக கருதப்படும் நான்ஸி பெலோஸி கூறியதாவது, “அமெரிக்க சமூக போராளியான மார்ட்டின் லூதர் கிங் (ஜுனியர்), காந்தியின் கொள்கை மற்றும் போராட்ட முறைகளால் பெரிதும் கவரப்பட்டவர். காந்தியின் தத்துவம் மற்றும் சிந்தனைகளை நான் நம்புகிறேன்.

அமெரிக்க அகிம்சை இயக்கத்தின் ஆன்மீக தலைவராக திகழ்பவர் காந்தியடிகள். மார்ட்டின் லூதர் கிங் (ஜுனியர்) இந்தியாவிற்கு மேற்கொண்ட பயணமே அதற்கு சாட்சி.

மார்ட்டின் லூதர் கிங் (ஜுனியர்), கடந்த 1950களின் மத்திய ஆண்டுகள் தொடங்கி, 1968ம் ஆண்டு அவர் படுகொலை செய்யப்படும் வரை, அமெரிக்க மனித உரிமைகள் வரையறுப்பு தொடர்பாக பெரிய பங்களிப்பை ஆற்றினார்.

‘சத்யாகிரஹா’ என்ற வார்த்தைக்கு இரண்டு அர்த்தங்கள் உண்டு. அகிம்சையைப் பின்பற்றுதல் மற்றும் உண்மையில் உறுதியாக இருத்தல். அதைத்தான் மார்ட்டின் லூதர் கிங் (ஜுனியர்) பின்பற்றினார். இந்தக் கொள்கை அமெரிக்காவிற்கு இந்தியா அளித்த கொடை” என்றார்.