மார்ஃபிங் செய்து பிளாக்மெயில்..  பிடிபட்ட பெண்கள் வேட்டை கும்பல்..

கீழக்கரை பகுதியைச் சேர்ந்த திருமணம் ஆன பெண் ஒருவர், ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் பிரத்தியேக எண்ணைத் தொடர்புகொண்டு, இன்ஸ்டாகிராம் செயலி மூலம் மோசடி கும்பல் ஒன்று, பெண்களை நண்பர்களாக்கி, அவர்களது புகைப்படங்களை ஆபாசமாக மார்ஃபிங் செய்து, சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுவிடுவதாக மிரட்டுவதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

அப்பெண்களைக் கட்டாயப்படுத்தி, வீடியோ காலில் நிர்வாணமான நிலையில் பேசும்படி மிரட்டிப் பதிவுசெய்து கொண்டு, அதை வெளியிட்டுவிடுவதாகக் கூறி பணம் பறிப்பில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், இதுபோன்று தன்னை மிரட்டி 7.50 லட்ச ரூபாயை வங்கிக் கணக்குகள் மூலம் அபகரித்துக் கொண்டதாகவும், தொடர்ந்து பணம் கேட்டு மிரட்டி வருவதாகவும் புகாரளித்தார்.

இது தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் உத்தரவின் பேரில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு, சைபர் கிரைம் போலீஸார் சம்பந்தப்பட்ட கும்பலின் சமூக வலைத்தளங்கள், வங்கிக் கணக்குகள், இணையதள வங்கி பரிவர்த்தனைகள் ஆகியவற்றைக் கண்காணித்து வந்தனர்.

இதில், ஜெர்மனியில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் பயின்று வரும் கீழக்கரையைச் சேர்ந்த முகம்மது முகைதீன் என்பவரது தலைமையிலான கும்பல், இந்த குற்றச்செயல்களில் ஈடுபட்டது தெரியவந்ததுள்ளது.  முகம்மது முகைதீன், பல பெண்களிடம் இதுபோன்று பணம் பறித்து உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வந்ததுடன், தமிழகத்தைச் சேர்ந்த தனது நண்பர்களுக்குப் பணம் கொடுத்து, அவர்களது வங்கிக் கணக்குகள் மூலம் பெண்களிடம் இருந்து அபகரிக்கப்படும் பணத்தை தன் கணக்குக்கு மாற்றியதும் கண்டறியப்பட்டது.

தொடர் விசாரணையில், கீழக்கரையைச் சேர்ந்த முகம்மது முகைதீன், புதுச்சேரி முகம்மது இப்ராஹீம் நூர், சென்னை பாசித் அலி, திருநெல்வேலி ஜாசம் கனி, கீழக்கரை பார்டு பைசல், நாகப்பட்டினம் முகம்மது ஜாசிம் ஆகியோர், இன்ஸ்டாகிராமில் கணக்குகள் தொடங்கி, அதன் மூலம் நண்பர்களாகும் பெண்களின் படங்களை மார்ஃபிங் செய்தும், அதைக் காட்டி மிரட்டிப் பணம் பறித்து வந்ததும் தெரியவந்தது.

கீழக்கரையைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட இன்னொரு பெண்ணின் உறவினர் கொடுத்த புகாரின் பேரில், மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்து திருநெல்வேலியைச் சேர்ந்த ஜாசம் கனி, கீழக்கரையைச் சேர்ந்த பார்டு பைசல் ஆகிய இருவரையும் கைது செய்து நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைத்துள்ளனர்.

மாவட்டத்தில் தொடர்ந்து நடைபெற்று வரும் இது போன்ற பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து, பாதிக்கப்பட்டவர்கள் தனது பிரத்யேக எண்ணில் தைரியமாகப் புகார் அளிக்க வேண்டும் எனவும், இது போன்ற சமூக விரோத கும்பல்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண் குமார் தெரிவித்துள்ளார்.

– லெட்சுமி பிரியா