டெல்லி: நீட், ஜேஇஇ தேர்வுகளை ஆன்லைனில் நடத்த வேண்டும் என பஞ்சாப் முதலமைச்சர் அமரீந்தர் சிங் வலியுறுத்தியுள்ளார்.

கொரோனா பாதிப்புகளுக்கு இடையில் அடுத்த மாதம் நீட், ஜேஇஇ தேர்வுகள் நடக்கின்றன. ஆனால் இந்த தேர்வை நடத்த அரசியல் கட்சியினர் பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கொரோனா காலத்தில் தேர்வை நடத்துவது சரியல்ல என்றும் அவர்கள் கூறி வருகின்றனர்.

ஆனால், தேர்வு நடத்தப்படும் என்று மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்து உள்ளார். இந்நிலையில் இந்த தேர்வுகளை ஆன்லைனில் நடத்த வேண்டும் என பஞ்சாப் முதலமைச்சர் அமரீந்தர் சிங் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் கூறி இருப்பதாவது: தேர்வை ஓராண்டு தள்ளி வைக்க வேண்டும் என்ற இடைவெளி கடினமாக இருக்கும். அடுத்த ஆண்டு எங்களுக்கு இரட்டை தேர்வுகள் இருக்க முடியாது. நாங்கள் கேட்பது இரண்டு மூன்று மாத தாமதம்.

கொரோனா தொற்றானது செப்டம்பர் 20 முதல் 24 வரை உச்சத்தில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாங்கள் 3,000 இறப்புகளையும் 1,10,000 நோயாளிகளையும் எட்டக்கூடும். எங்கள் குழந்தைகளின் ஆரோக்கியத்தில் நாங்கள் ஆர்வமாக உள்ளோமா அல்லது சில தேர்வில் ஆர்வமாக உள்ளோமா?

சிறந்த வசதி உடையவர்கள் தேர்வு மையங்களை அடைவார்கள். ஆனால் கிராமங்களில் இருப்பவர்களின் நிலை என்ன? பஞ்சாபில் சரியான சாலைகள் உள்ளன. ஆனால் நாட்டின் பிற பகுதிகள்? வாய்ப்பு கிடைத்திருக்க வேண்டிய ஏழைகள் பாதிக்கப்படுவார்கள். அதனால்தான் தாமதிக்க வேண்டும் என்கிறோம்.

மத்திய அரசானது எங்களுடன் சரியாக தொடர்பு கொள்ளவில்லை, கொரோனா நெருக்கடிக்கு நடுவில் இருக்கிறோம். நவம்பர், டிசம்பர் மாதங்களில் நீங்கள் ஏன் தேர்வுகளை நடத்த முடியாது? அனைவருக்கும் சம உரிமை இருக்க வேண்டும் என்று கூறுகிறோம். ஆனால் ஏழைக் குழந்தைகளுக்கு சம உரிமை கிடைக்காது என்று தோன்றுகிறது என்றார்.