டில்லி

ஜெர்மன் அதிபர் ஆஞ்சலா மெர்கெல் தனது இந்தியப் பயணத்தில் ஆம் ஆத்மி பிரமுகர் அதிஷி உள்ளிட்ட ஐந்து பெண்களைச் சந்தித்துள்ளார்.

கடந்த வாரம் வியாழன் அன்று ஜெர்மன் அதிபர் ஆஞ்சலா மெர்கெல் இரு நாள் பயணமாக இந்தியா வந்திருந்தார்.  அப்போது அவர் இந்தியப் பிரதமர் மோடியைச் சந்தித்து 17 ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார்.   இரு நாடுகளின் வளர்ச்சிக்கு உதவும்வகையில் வேலைவாய்ப்பு, பாதுகாப்பு, பொருளாதாரம், செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட பல துறைகளுக்கான ஒப்பந்தங்களில் ஜெர்மனி இணைந்து செயலாற்றும் என ஆஞ்சலா தெரிவித்தார்

கடந்த வெள்ளிக்கிழமை அன்று அவர் ஐந்து இந்தியப் பெண்மணிகளைச் சந்தித்தார்.   அவர்களில் ஆம் ஆத்மி தலைவர்களில் ஒருவாரானஅதிஷி, உச்சநீதிமன்ற வழக்கறிஞர் கருணா நுண்டி ஆகியோர் அடங்குவர்.  இவர்களைத் தவிர ஷரத்தா சர்மா, ஷமிகா ரவி மற்றும் நதாஷா சரின் ஆகியோரையும் ஆஞ்சலா சந்தித்துள்ளார்.

அரசு நடத்தும் பள்ளிகளில் கல்வி புனரமைப்பு பணியை மேற்கொண்டுள்ள அதிஷியிடம் ஆஞ்சலா இந்திய பெண்கள் எதிர்கொள்ளும் சவால்கள் பற்றிக் கேட்டறிண்டுள்ளார்.    இந்த ஐவருடனும் ஆஞ்சலா காலை உணவு சாப்பிட்டுள்ளார்.  இந்த சந்திப்பு அவர்களுக்கு உற்சாகம் அளித்து தங்கள் பணியைத் தொடர ஊக்கம் அளித்ததாக இந்த பெண்கள் தெரிவித்துள்ளனர்.