பெர்லின்: ஜெர்மனி நாட்டில் ஊரடங்கு டிசம்பர் 20ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 6.01 கோடி பேராக உள்ளது.

கிட்டத்தட்ட இந்த வைரசுக்கு  14.1 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஜெர்மனியில் 9.83 லட்சம் பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ளனர்.  15 ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர்.

இந் நிலையில், உச்சக்கட்டத்தில் உள்ள கொரோனா தொற்று பாதிப்புகளை எதிர்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்து அமைச்சர்களுடன் அந்நாட்டு அதிபர் ஏஞ்செலா மெர்கல் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

ஜெர்மனியில் நவம்பர் மாதம் கடைசி வரை ஊரடங்கு விதிகளை தளர்த்த முடியாது.  எனவே டிசம்பர் 20ம் தேதி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டு உள்ளன.

ஜனவரி மாதத்தில் கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கை குறைய வேண்டும். அப்படி தொற்றுகள் குறையாவிட்டால் கட்டுப்பாடுகள் தொடரும் என்று கூறியுள்ளார்.