எரித்துக் கொல்லப்பட்ட சிறுமி.. அதிர்ச்சியில் உறைந்த போலீஸ்..

 

திருச்சி மாவட்டம் அதவத்தூர் பாளையத்தைச் சேர்ந்த பெரியசாமி மகேஸ்வரி தம்பதியினரின் இரண்டாவது மகள் 9-ஆம் வகுப்பு படித்து வந்தார்.  இவர் மதியம் வரை வீட்டிலிருந்துள்ளார்.  வீட்டைக் கூட்டி குப்பையைக் கொட்டுவதற்காக வெளியே சென்ற மாணவி நீண்ட நேரமாகக் காணாததால் அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் பதற்றமடைந்து தேட ஆரம்பித்துள்ளனர்.

அப்போது ஊருக்கு வெளியே எரிந்த நிலையில் மாணவியின் சடலம் கிடப்பதாகத் தகவல் வந்ததைத் தொடர்ந்து அவரது குடும்பத்தினர் அங்குச் சென்று பார்த்த போது மாணவி முட்புதரில் எரித்து கொலை செய்யப்பட்டுக் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

உடனடியாக சோமரசன்பேட்டை காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளனர்.  போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் மாணவியின் சடலத்தின் அருகில் மண்ணெண்ணெய் கேன் மற்றும் தீப்பெட்டி கிடந்துள்ளது.  இதனைப் பார்த்ததும் அவரது உறவினர்கள் சிறுமியைக் கொளுத்தியவர்களைக் கைது செய்ய வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்பு எஸ்.பி ஜியாவுல் ஹக் அவரது உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு போராட்டத்தைக் கைவிட்டனர்.

மேலும் சம்பவ இடத்தை திருச்சி சரக டி.ஐ.ஜி ஆனி விஜயா, திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜியாவுல் ஹக் ஆகியோர் பார்வையிட்டு மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது பற்றி போலீஸார், “சிறுமி இவ்வளவு தூரம் வரவேண்டிய அவசியமில்லை.  அவர்களது உறவினர்கள் சிலர் மீது சந்தேகம் உள்ளது.  மாணவியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பியுள்ளோம். அறிக்கை வந்த பிறகே மேலும் விபரம் தெரியவரும்” என்று கூறியுள்ளனர்.

வீட்டிலிருந்த சிறுமி இவ்வாறு தீ வைத்துக் கொளுத்தப்பட்ட இச்சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளது.

– லெட்சுமி பிரியா