காதலன் வீட்டில் தஞ்சம் அடைந்த மகளைக்  கோடரியால்  வெட்டிக் கொன்ற தந்தை

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டத்தில் உள்ள கன்பன்னா கிராமத்தைச் சேர்ந்த 18 வயது பெண் அந்த ஊரில் மளிகைக் கடை வைத்துள்ள வேற்று சமூக இளைஞரைக் காதலித்துள்ளார்.

நேற்று முன்தினம் நள்ளிரவில் வீட்டை விட்டு வெளியேறிய அந்த பெண், காதலன் வீட்டில் தஞ்சம் புகுந்துள்ளார்.

இது குறித்து அந்த பெண்ணின் காதலர், பெண்ணின் தந்தைக்குத் தகவல் கொடுத்தார்.

”எங்கள் வீட்டில் தான் இருப்பேன் என்று உங்கள் மகள் பிடிவாதமாக இருக்கிறாள்.. நீங்கள் வந்து அழைத்துச் செல்லுங்கள்’’ என அந்த காதலன் கூறியுள்ளார்.

ஆத்திரம் அடைந்த பெண்ணின் தந்தை வீட்டில் இருந்த கோடரியை எடுத்துக்கொண்டு, காதலன் வீட்டுக்கு  வந்துள்ளார்.

‘’வா! நமது வீட்டுக்குப் போகலாம்’’ என அழைத்துள்ளார்.

ஆனால் அந்த இளம் பெண், ‘’ வர முடியாது. இங்கு தான் இருப்பேன்’’ என்று கூறி தந்தையுடன் சண்டை போட்டுள்ளார்.

இந்த சம்பவத்தை ஊர் மக்கள் வேடிக்கை பார்த்துள்ளனர்.

கோபத்தின் உச்சிக்கே சென்ற பெண்ணின் தந்தை கோடரியால், மகளை அவள் உயிர் போகும் வரை வெட்டினார். தடுக்க வந்த காதலனுக்கும் வெட்டு விழுந்தது.

சம்பவ இடத்திலேயே அந்த பெண் ரத்த வெள்ளத்தில் பிணமானாள்.

காதலன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

போலீசார் விரைந்து வந்து பெண்ணின் தந்தையைக் கைது செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

-பா.பாரதி.